Published : 25 Mar 2024 07:03 AM
Last Updated : 25 Mar 2024 07:03 AM

கன்னட ஹீரோ நடித்த ‘இவன் அவனேதான்’

பாலிவுட்டில் இப்போது மூன்று ‘கான்’ நடிகர்கள் முன்னணியில் இருப்பது போல ஒரு காலத்தில், கன்னட சினிமாவில் மூன்று ‘குமார்கள்’ டாப்பில் இருந்தனர். அவர்கள், கல்யாண் குமார், உதயகுமார், ராஜ்குமார். இதில் உதயகுமார், ஏராளமான கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும் 1950 மற்றும் 60-களில்செங்கோட்டை சிங்கம், யானைப்பாகன் உட்பட சில தமிழ்ப் படங்களிலும் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். இவர் ஹீரோவாக நடித்த மற்றொரு தமிழ்ப் படம், ‘இவன் அவனேதான்’.

அம்பிகா, நாயகியாக நடித்தார். இவர், திருவிதாங்கூர் சகோதரிகள் என்றழைக்கப்படும் பத்மினி, லலிதா, ராகிணி ஆகியோரின் உறவினர். தமிழில், ரம்பையின் காதல், இரத்னபுரி இளவரசி உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். எஸ்.வி. சகஸ்ரநாமம், கே.சாரங்கபாணி, பண்டரிபாய், சி.ஏ.தேவிகா என பலர் நடித்தனர்.

ராஷ்மியின் கதைக்கு கலைப்பித்தன் திரைக்கதை எழுதினார். அந்த காலகட்டத்தில் தெலுங்குப் படங்களை இயக்கி வந்த பி.தர், இந்தப் படத்தை இயக்கினார். டி.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டிஜி ராஜ் தயாரித்தார்.

கிராமத்தின் வாழும் படிக்காத முத்து, அதிக வசதி கொண்ட அத்தை பிரேமாவின் ஒரே மகள் மாலினியை விரும்புகிறார். ஆனால் மாலினி, முத்துவை வெறுக்கிறார். இதற்கிடையே நாடகம் நடத்தும் லட்சுமி என்பவரின் கணவர் சுந்தரின் டீமில் இணைகிறார் மாலினி. சொத்துக்காக மாலினியை அடைய நினைக்கிறார் சுந்தர். மாலினியின் வாழ்க்கையில் இன்னொருவர் திடீரென நுழைகிறார். தனி மனுஷியாக மாலினியை வளர்த்த பிரேமாவுக்கும் பிரச்சினை இருக்கிறது. இவர்கள் அனைவரின் பிரச்சினையும் மருத்துவர் குணபூஷணத்திடம் வருகிறது. அவர் எப்படி அதைத் தீர்த்து வைக்கிறார் என்பது படம்.

எம்.ரங்கா ராவ் இசை அமைத்தார். இவர், கன்னடம், தெலுங்கில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தஞ்சை ராமையா தாஸ், எம்.எஸ்.சுப்ரமணியம், கலைப்பித்தன், வில்லிபுத்தன், கோவை சபாபதி பாடல்களை எழுதினர். பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.ஜானகி பாடிய, ‘இன்ப எல்லை காணும் நேரம்’, திருச்சி லோகநாதன், எஸ்.ஜானகி குரலில், ‘வாழ்க்கையின் பாடம்’, 'ஹேப்பி ஜாலி குட் டே’ , எஸ்.சி.கிருஷ்ணன், எம்.எஸ்.ராஜேஷ்வரி பாடிய ‘எது நிஜம் எது பொய்’, எஸ்.சி.கிருஷ்ணன் குரலில், ‘செம்பட்டு வேட்டி கட்டி’, பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.லீலா பாடிய ‘தேவி ஜெகன் மாதா’, திருச்சி லோகநாதன் பாடிய ‘கண்ணே அடி பெண்ணே’ உட்பட படத்தில் 9 பாடல்கள்.

இப்படத்தில் ‘இன்ப எல்லை காணும் நேரம்’ பாடல் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட். அந்த காலகட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல் இது.

1960-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்துக்கு வயது 64. இதன் பிரின்ட் இப்போது இல்லை என்பது சோகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x