Published : 05 Feb 2024 08:47 PM
Last Updated : 05 Feb 2024 08:47 PM

“சினிமா போதும் என்று நினைத்தேன்...” - நடிகர் விக்ராந்த் உருக்கம்

சென்னை: “சினிமா போதும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் இப்படத்துக்காக என்னை அணுகியபோது சிறிய கதாபாத்திரம் என்று தான் கருதினேன். வெற்றி இருந்தால்தான் நம்பிக்கை இருக்கும். என் மீது எனக்கு நம்பிக்கையே இருக்காது” என நடிகர் விக்ராந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்தின் ‘லால் சலாம்’ படம் வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ராந்த், “இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு மிக்க நன்றி. காரணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருந்தேன். சினிமாவுக்கு வந்து 16, 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. சரியாகத்தான் இருக்கிறோம். எங்கே மிஸ் ஆனது என தெரியவில்லை. சினிமா போதும் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

அப்போது தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமிருந்து போன்கால் வந்தது. சிறிய கதாபாத்திரமாக இருக்கும் என்று தான் நினைத்தேன். அவரிடம் முதலில் கேட்ட கேள்வி வில்லன் கதாபாத்திரமா என்று கேட்டேன். ஆனால் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார். அப்போது தான் நான் ஒன்றை நம்பினேன். கடவுள் எனக்கு கொடுத்த கிஃப்ட் இது. சினிமாவில் நான் இருக்க வேண்டும். என்னுடைய பயணம் இங்கே இருக்கிறது, சினிமாவில் இருக்க வேண்டும் என்று நான் நம்பிய தருணம் அது. நான் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்கு என் மேல் நம்பிக்கையே இருக்காது. வெற்றி இருந்தால் அது எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஆனால் எனக்கு என் மீதே சந்தேகம் இருந்தது. நான் சரியாக நடிக்கிறேனா இல்லையா என்று. அப்படியிருக்கும்போது ரஜினிகாந்த் 2, 3 முறை என்னை அழைத்து, ‘நீ ரொம்ப நல்லா பண்ற’ என பாராட்டினார். ஒரு காட்சியில் என்னை கட்டியணைத்து பாராட்டினார். அதன்பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்துவிட்டது. அவருடன் நடித்த நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x