Published : 05 Feb 2024 07:30 PM
Last Updated : 05 Feb 2024 07:30 PM

ரசிகர்களுடன் விஜய் மீண்டும் ‘செல்ஃபி’ சந்திப்பு @ புதுச்சேரி

புதுச்சேரி: நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின் ரசிகர்கள் சந்திப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சி அறிவிப்பின் மூலம் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். பிப்ரவரி 2-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், நேற்று (பிப்.4) தனது அரசியல் பயணத்தை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், தன் ரசிகர்களை ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே’ என குறிப்பிட்டது கவனம் பெற்றது. தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார்.

புதுச்சேரியில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (பிப்.4) புதுச்சேரி - கடலூர் சாலையிலுள்ள ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. ஏஎஃப்டி பஞ்சாலை முன்பு ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். நெரிசல் அதிகரித்ததால் அப்பகுதியில் பஸ்கள் செல்லாமல் திரும்பி செல்லத்தொடங்கின. தொடர்ந்து ஏஎஃப்டி வாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி ரசிகர்களுக்கு கை அசைத்தார் விஜய். அப்போது அவரை நோக்கி மாலை ஒன்று வீசப்பட்டது. அதனை அணிந்துகொண்ட விஜய் பின்னர் ரசிகர்களிடமே கொடுத்துவிட்டுச் சென்றார்.

அதேபோல இன்றும் வேனில் ஏறி ரசிகர்களைச் சந்தித்த விஜய், தன் செல்ஃபோனை எடுத்து அதில் செல்ஃபி வீடியோ எடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்ட நாளன்றும் ரசிகர்களை பார்த்து கையைசைத்துச் சென்றார். அரசியல் அறிவிப்புக்குப் பின் 3 நாட்கள் ரசிகர்களைச் சந்தித்துள்ளார் விஜய். இதனிடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுவையில் படப்பிடிப்பிலிருக்கும் நடிகர் விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசியல் என்ட்ரிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x