Published : 27 Oct 2023 04:55 PM
Last Updated : 27 Oct 2023 04:55 PM

கேரளாவில் ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் 7 பேர் மீது வழக்குப் பதிவு

கொச்சி: ‘ரஹேல் மக்கன் கோரா’ என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின்பேரில் கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது கேரளாவில் இதுவே முதன்முறை.

உபைனி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ரஹேல் மக்கன் கோரா’ (Rahel Makan Kora). இந்தப் படத்துக்கு வேண்டுமென்றே எதிர்மறையான விமர்சனங்களை அளித்ததுடன், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக யூடியூப், பேஸ்புக் சினிமா விமர்சகர்கள் மீது இயக்குநர் உபைனி கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் அருண் தரங்கா, அஸ்வந்த் கேஓகே, ஃபேஸ்புக் பயனர்களான ‘anoopanu6165’, soulmates55 மற்றும் யூடியூப் சேனல்களான என்வி ஃபோகஸ், ட்ரெண்ட் செக்டார் 24X7 உள்ளிட்ட ஆன்லைன் விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ‘அரோமலிந்தே ஆத்யதே பிராணாயாம்’ (Aromalinte Aadyathe Pranayam) என்ற மலையாள படத்தின் இயக்குநர் முபீன் ரவூப் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில், “மேற்கண்ட என்னுடைய படம் வெளியாகி 7 நாட்களுக்கு திரைப்பட விமர்சகர்கள், சமூக ஊடக இன்ஃபுளுவன்சர்கள் உள்ளிட்ட யாரும் படம் குறித்த விமர்சனங்களை வெளியிடக் கூடாது” என தெரிவித்திருந்தார். பெருகிவரும் ஆன்லைன் விமர்சகர்களின் முறையற்ற விமர்சனங்கள் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸை பாதிக்கின்றன என்றும், இவை திரைத்துறைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுபோன்ற விவகாரங்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், படத்துடன் தொடர்புடைய பிற நபர்கள் அளிக்கும் புகாரில் குற்றவியல் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது 7 யூடியூபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x