

எர்ணாகுளம்: ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகனை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட காரணத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் விநாயகன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மலையாளத்தில் வெளியான கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.
இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை அன்று எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் அவர் ஆஜரானார். அவர் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் பிரச்சினை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர் காவல் நிலையம் வந்துள்ளார். அப்போது அவர் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவர் மது போதையில் இருந்ததாகவும் தகவல். இதனை காவல் துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சூழலில் அவரை மருத்துவ பரிசோதனைக்காக காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.