Published : 14 Oct 2023 05:47 AM
Last Updated : 14 Oct 2023 05:47 AM

மாமன் மகள்: ‘கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே...’

சில பாடல்கள் மட்டும், எந்த படம் என்று தெரியாமலேயே மனதில் தங்கிவிடும் மாயத்தைத் தாராளமாகச் செய்யும். அப்படி படம் பெயர் நினைவில் இல்லாமல் பலருக்கு மனதில் தங்கிய பாடல்களில் ஒன்று, நடிகர் சந்திரபாபு, சாவித்திரியின் புகைப்படத்தைப் பார்த்துப் பாடும், ‘கோவா மாம்பழமே... மல்கோவா மாம்பழமே...’ பாடல்.

இதில் சந்திரபாபு மட்டுமின்றி அவருடன் சேர்ந்து பாடி ஆடும் துரைராஜின் நடனமும் பேசப்பட்டது. அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம், ‘மாமன் மகள்’!

ஜெமினி கணேசன், சாவித்திரி, சந்திரபாபு, பாலையா, சி.கே.சரஸ்வதி என பலர் நடித்த படம் இது. காமெடி காட்சிகள் நிறைந்த இந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் அப்போது அதிக பிரபலமாகாத ஸ்ரீதர். படத் தொகுப் பாளரான ஆர்.எஸ்.மணி தயாரித்து இயக்கினார். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார்.

கோடீஸ்வரர் தர்மலிங்கத்தின் மகள் சாவித்திரி. கோடீஸ்வரரின் நண்பர் பாலையா. காணாமல் போன தனது தம்பி மகனைத் தேடிக் கண்டுபிடித்து, சாவித்திரியைத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அம்மா இறந்துவிடுகிறார். தம்பி மகன் ஜெமினி கணேசன். அவருக்குச் சாவித்திரியைக் கண்டதும் காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில், தான் காதலிப்பது தனது அத்தை மகள் என்ற உண்மை தெரியவருகிறது. இதற்கிடையே தர்மலிங்கத்தின் சொத்துகளை அபகரிக்க நினைக்கும் டி.எஸ்.பாலையா, சந்திரபாபுதான், தொலைந்து போன உங்கள் மருமகன் என்று அழைத்து வருகிறார். இந்த உண்மையை ஜெமினி எப்படி உடைத்து சுபம் போடுகிறார்கள் என்பதுதான் கதை.

எளிதாக யூகித்துவிடக் கூடிய கதைக்கு அழகான திரைக்கதை மூலம் உயிரூட்டி இருந்தார் இயக்குநர் மணி. பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், சுரபி, ஆத்மநாதன், சீதாராமன், கம்பதாசன் பாடல்கள் எழுதியிருந்தனர். பாடல்கள் வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி காதல் காட்சி கெமிஸ்ட்ரியும் சந்திரபாபுவுடன் துரைராஜின் காமெடியும் வரவேற்பைப் பெற்றன. 1955 ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தப் படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x