Published : 10 Sep 2023 05:03 PM
Last Updated : 10 Sep 2023 05:03 PM

‘ஆர்ஆர்ஆர்’ படத்தை சிலாகித்த பிரேசில் அதிபர் - ராஜமவுலி நன்றி

புதுடெல்லி: ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் குறித்து பிரேசில் அதிபர் சிலாகித்துள்ளார். இதற்கு இயக்குநர் ராஜமவுலி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் தலைமையில் ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று (செப் 09) தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டையொட்டி டெல்லி வந்துள்ள பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அவரிடம் ‘உங்களுக்குப் பிடித்த இந்திய படங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த லுலா டா சில்வா, “’ஆர்ஆர்ஆர்’ என்ற மூன்று மணி நேர திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் மிகவும் கொண்டாட்டமான சில காட்சிகளும், அழகான நடனமும் இடம்பெற்றிருந்தன. இந்தியாவையும், இந்தியர்களையும் பிரிட்டிஷார் கட்டுப்படுத்தி வைத்திருந்தது குறித்த விமர்சனமும் அதில் இருந்தது. இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்று நம்புகிறேன். காரணம் என்னிடம் பேசும் அனைவரும் கேட்டும் முதல் கேள்வி, ‘ஆர்ஆர்ஆர்' படத்தை பார்த்துவிட்டீர்களா?’ என்பதுதான். எனவே, அப்படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அப்படம் என்னை மதிமயங்கச் செய்தது”. இவ்வாறு பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தெரிவித்தார்.

அவர் பேசிய காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இயக்குநர் ராஜமவுலி, “உங்கள் அன்பான வாழ்த்தைகளுக்கு மிக்க நன்றி. நீங்கள் இந்திய சினிமா குறித்து பேசியதும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை ரசித்ததும் மனதுக்கு இதமானதாக இருக்கிறது. எங்கள் குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் நாட்டில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x