Published : 10 Sep 2023 02:06 PM
Last Updated : 10 Sep 2023 02:06 PM

நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க 67-வது பொதுக்குழு கூட்டம் 

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்கூட்டம் நடிகரும் நடிகர் சங்க தலைவருமான நாசர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 10) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில், நடிகைகள் லதா, சச்சு, சத்யபிரியா, குஷ்பு, கோவை சரளா, லலிதகுமாரி, தேவயானி, சோனியா வெங்கட் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் மறைந்த 64 கலைஞர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசர் தலைமையில் நடந்த இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். நடிகர் ஶ்ரீமன் தொகுத்து வழங்கினார். நடிகை கோவை சரளா 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசிக்க, கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தி விளக்கம் அளித்தார்.

கடந்த கால நிர்வாக செயல்பாடுகள், புதிய கட்டிடம் கட்டி முடிப்பதற்கு வங்கி கடன், நடிகர்களிடம் நிதி திரட்டுதல், நட்சத்திர கலைவிழா நடத்துதல் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கி பொதுச்செயலாளர் விஷால் ஒப்புதல் பெற்றார். இதனைத் தொடர்ந்து நாசர் நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினார். இந்தக் கூட்டத்தின் இறுதியில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x