Published : 02 Aug 2023 05:51 AM
Last Updated : 02 Aug 2023 05:51 AM

நடிகர்கள், நடிகைகள் பற்றி அவதூறு: யூடியூபரை மன்னிப்பு கேட்க வைத்தார் நடிகர் பாலா

கொச்சி: நடிகர், நடிகைகள் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசிவந்த யூடியூபரை வீட்டுக்கு அழைத்து வந்து நடிகர் பாலா மன்னிப்புக் கேட்க வைத்தார்.

கேரளாவில் பிரபல யூடியூபராக இருப்பவர், சந்தோஷ் வர்கி. திரைப்படங்கள் வெளியான முதல் காட்சி முடிந்ததும் விமர்சிப்பார். இவர் விமர்சனத்துக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு பிரபல ஹீரோக்கள் பற்றியும் நடிகைகள் பற்றியும் அவதூறாகப் பேசியும் வந்துள்ளார். சமீபத்தில் நடிகர் மோகன்லால் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். பிரபல நடிகை ஒருவர் பற்றியும் ஆபாசமாகப் பேசியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் பாலா, சந்தோஷ் வர்கியை தனது வீட்டுக்கு வரவழைத்தார். நடிகர், நடிகைகள் பற்றி ஆதாரமில்லாமல் பேசியது எப்படி, நீங்கள் நேரில் பார்த்தீர்களா? என்று கேள்விகள் கேட்டார். படங்கள் பற்றி நீங்கள் விமர்சிக்கலாம், நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி விசாரிக்க உங்களுக்கு உரிமை இல்லை என்றார். இதை ஏற்றுக்கொண்ட சந்தோஷ், நடிகர், நடிகைகள் பற்றி அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டார். அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகர் பாலா. இதை சமூகவலைதளங்களில் பலர் வரவேற்றுள்ளனர்.

இதுபற்றி நடிகர் பாலாவிடம் கேட்டபோது, “திரைத்துறையும் மீடியாவும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் இருக்கிறது. இதில் நடிகர், நடிகைகளை ஆதாரமில்லாமல் அவதூறாக பேசி ஏன் சம்பாதிக்க வேண்டும்? தமிழிலும் சில யூடியூபர்கள் இப்படி ஆபாசமாக பேசி வருவது வருத்தமாக இருக்கிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x