Published : 20 Jun 2023 01:40 PM
Last Updated : 20 Jun 2023 01:40 PM

‘ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம்

மும்பை: ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்துக்கு தடை விதிக்குமாறு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைக்கிறது. இப்படத்தின் திரைக்கதையும் வசனங்களும் ராமரையும், அனுமாரையும் அவமதிக்கும் வகையில் உள்ளன. மேலும் இந்துக்களின் மத நம்பிக்கையையும், சனாதன தர்மத்தையும் இப்படம் காயப்படுத்துகிறது.

ஸ்ரீராமர் இந்த நாட்டில் பிறந்த அனைவருக்கும் கடவுளாக இருப்பவர். அது எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. இப்படத்தில் ராமரையும், ராவணனையும் ஒரு வீடியோ கேம் கதாபாத்திரத்தை போல காட்டியுள்ளனர். இப்படத்தின் வசனங்களும் உலகம் முழுக்க வாழும் இந்தியர்களை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்துக்கு உடனடியாக தடை விதிக்கவும், எதிர்காலத்தில் இப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகாத வகையில் தடுக்கவும் பிரதமர் நரேந்திரம் மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுக்கிறது.

மேலும், படத்தின் இயக்குநர் ஓம் ராவத், வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர், தயாரிப்பாளர்கள் ஆகியோரின் மீது இந்துமத நம்பிக்கையை புண்படுத்தியதற்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்திய சினிமாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மோசமான ஒரு படத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலிகான் ஆகியோர் நடித்திருக்கக் கூடாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் ராமாயணத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர். எதிர்மறை விமர்சனங்கள், சர்ச்சைகளைத் தாண்டி படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.375 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x