Published : 06 Jan 2017 06:32 PM
Last Updated : 06 Jan 2017 06:32 PM

சென்னை பட விழாவில் தவறவிடாதீர்.... காடு பூக்குன்ன நேரம்

KAADU POOKKUNNA NERAM | ரஷ்ய கலாச்சார மையம் | ஜன.7 - பிற்பகல் 2.00 | DIR: DR.BIJU | MALAYALAM | 2016 | 106'

தனது படங்களில் வலுவான அரசியலை பேசத் தயங்காதவர் இயக்குநர் பிஜுகுமார். இவரது 'காடு பூக்குன்ன நேரம்' படமும் அப்படித்தான். பிஜுகுமாரின் 'வலிய சிறகுள்ள பக்‌ஷிகள்', 'பேரரியாதவர்', 'ஆகாஷத்திண்டே நிறம்', 'வீட்டிலேகுள்ள வழி' போன்ற படங்களைப் போல இந்தப் படத்திலும் கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் கிடையாது.

"பெயர்களுக்குப் பின்னால் இன, மத அடையாளம் இருப்பதால் அவை சில கட்டுப்பாடுகளுக்குள் இருக்கின்றன. என் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட சில மக்களை குறிக்கிறது. பிறப்பால், செய்யும் தொழிலால் கதாபாத்திரங்கள் ஒரு சமுதாய, பொருளாதார எல்லைக்குள் அடங்கிவிடுகிறது. பெயர்களை விட ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாய் இருப்பது முக்கியம் என நினைக்கிறேன். இந்தப் படம், நமது கருத்து சுதந்திரத்துக்கும், அரசியல் நம்பிக்கைகளுக்கும் எதிராக இருக்கும் பிரச்சினைகளை ஆராய்கிறது" என்கிறார் பிஜுகுமார்.

தீவிரவாதிகளை கைது செய்வது என்ற போர்வையில் ஆதிவாசிகளையும், தலித்துகளையும் அதிகாரிகள் ஒடுக்குகின்றனர். அதிகார மையத்தின் தரகர்களாக செயல்படுபவர்களுக்கும், சட்டம் பாதுகாப்பு என்ற பெயரால் ஒடுக்கப்படுபவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலே என் படம் என்கிறார் அவர்.

"தீவிரவாதி என்று முத்திரையிடப்படும் ஒரு பெண்ணைக் கைது செய்ய, காவல்துறை அதிகாரி ஒருவர் காட்டுக்குள் செல்கிறார். அவளைக் கண்டுபிடித்து கைது செய்தாலும் காட்டிலிருந்து திரும்பும் வழியை அவர் மறக்கிறார். அந்த பெண்ணுக்கு வழி தெரியுமென்றாலும் அவள் உதவ முன்வராமல் இருக்கிறாள். இங்குதான் குணாதிசயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் முகமாக இருக்கும் ஆண் காட்டில் தொலைய, பெண் வலிமையடைகிறாள். வேட்டையாடப்படுபவள் பாதுகாவலாகவும், வேட்டையாடுபவன் பாதிக்கப்படுபவனாகவும் மாறுகிறான்" என்கிறார் அவர்.

மாண்ட்ரியல் உட்பட பல திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. இந்திரஜி, ரிமா கல்லிங்கால், இந்திரன்ஸ், பிரகாஷ் பாரே, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படத்துக்கு எம்.ஜே.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அச்சன்கோவில், கொன்னி உள்ளிட்ட காடுகளில் பல சவால்களைத் தாண்டி படப்பிடிப்பு நடந்துள்ளது. மலைவாழ் குழந்தைகள் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களும் இதில் நடித்துள்ளனர். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தீவிர சினிமா ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத இந்திய திரைப்படங்களில் இதுவும் ஒன்று

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x