Published : 16 Sep 2022 02:42 PM
Last Updated : 16 Sep 2022 02:42 PM

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம், 2005, பிரிவு 17(1)ன்படி மாநிலத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான நியமனம் செய்ய வேண்டி ஆணையத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பபடிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30 (Social Welfare and Women Empower Department) மற்றும் www.tncpcr.tn.gov.in (Tamil Nadu Commission for Protection of Child Rights) என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான அமைந்த படிவத்தில் புகைப்படத்துடன் (Pass-Port Size) 14.10.2022 அன்று மாலை 5.30 மணிக்குள், செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், எண்.183/1, ஈ.வே.ரா.பெரியார் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை -10 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேராத விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் ஆகியோரையும் நீக்கி 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x