Published : 21 Apr 2023 08:26 AM
Last Updated : 21 Apr 2023 08:26 AM

வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்த அக்ரானி நிறுவனத்தின் 119 வங்கி கணக்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

கோப்புப்படம்

பாட்னா: பிஹாரை சேர்ந்த அக்ரானி ஹோம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் சில முக்கிய உயர் அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது. இந்நிலையில் இவ்வழக்குத் தொடர்பாக 119 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும் 2 சொகுசு வாகனங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

அக்ரானி ஹோம்ஸ் பிஹார் தலைநகர் பாட்னாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும். வீடுகள் வாங்குவதற்காக மக்கள் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர்.

அந்தப் பணத்தைக் கொண்டு அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் தங்கள் பெயரில் சொத்துகள் வாங்கியுள்ளனர் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. அந்நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் மீதும் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து அமலாக்கத் துறை கூறுகையில், “அக்ரானி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளது. வீடு வாங்குவதற்காக மக்கள் செலுத்தியிருந்த பணத்தைக் கொண்டு அந்நிறுவனத்தின் இயக்குநர்களும் சில உயர் அதிகாரிகளும் தங்கள் பெயரில் சொத்துகள் வாங்கி உள்ளனர்.

கிட்டத்தட்ட வாடிக்கையாளர்களின் ரூ.9.73 கோடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது 73 புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் அக்ரானி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலோக் குமார் சிங் தன்னுடைய பெயரில் சொத்துகள் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x