Published : 10 Mar 2023 05:41 AM
Last Updated : 10 Mar 2023 05:41 AM

பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வருகிறது கிரிப்டோ பரிவர்த்தனை - மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தொடர்பாக உலக நாடுகள் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்நிலையில், கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை பண மோசடி தடுப்புச் சட்டத்துக்குள் கொண்டுவந்துள்ளது.

மேலும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை கையாளும் நிறுவனங்கள், அரசுக்கு தகவல் அளிக்க வேண்டிய நிறுவனங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அந்நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிகழும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் முறையாக பதிவு செய்ய வேண்டும். அந்தப் பரிவர்த்தனை குறித்த விவரங்களை, தேவைப்படும் சமயங்களில் அரசுக்கு வழங்க வேண்டும்.

கரோனாவுக்குப் பிறகு உலகஅளவில் கிரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது. கிரிப்டோகரன்சி சார்ந்து மோசடிகளும் அதிகரித்தன. இதன் தொடர்ச்சியாக கிரிப்டோகரன்சி தொடர்பான விதிமுறைகளை உலக நாடுகள் உருவாக்க ஆரம்பித்தன.

சென்ற ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அரசு, மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் பரிவர்த்தனை மூலமான வருவாய்க்கு 30 சதவீதம் வரி விதித்தது. இந்நிலையில் தற்போது கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. மேலும், மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை கையாளும் நிறுவனங்கள், அதன்
வாடிக்கையாளர்கள் பற்றிய முழுவிவரங்களை பெற வேண்டும் என்றும், ஏதேனும் சந்தேகத்துக்குரிய பரிமாற்றங்கள் நிகழ்ந்தால் அவை குறித்து முறையாக தகவல் அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x