Published : 25 Feb 2023 06:47 AM
Last Updated : 25 Feb 2023 06:47 AM

அதானி குழுமம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி

புதுடெல்லி: அதானி குழுமம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்ககுழு அமைப்பது தொடர்பாகமத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது தொடர்பாக சீலிடப்பட்ட உறையில் பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்சநீதிமன்றமே குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களை முடிவு செய்யும் என வழக்கை கடந்த வாரம் ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அதானி குழுமம் -ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்குவந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மாகூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் மாண்பையும், தீர்ப்பையும் விமர்சிக்க கூடிய வகையில் உள்ள ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘‘இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு எதிராக எந்தவித தடை உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. அதானி குழுமம்-ஹிண்டன்பர்க் தொடர்பான வழக்கில்கூடிய விரைவில் உரிய உத்தரவுகளை பிறப்பிப்போம்’’ என்று தெரிவித்தார்.

இலங்கையில் ரூ.3,650 கோடி அதானி முதலீடு: இலங்கையில் அதானி குழுமத்தின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அந்த நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கான ஒட்டுமொத்த முதலீடு 44.2 கோடி டாலராகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.3,650 கோடி ஆகும். பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தின்படி மன்னாரில் காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் திறனிலும், பூனேரின் கிராம மின்நிலையம் 100 மெகாவாட் திறனிலும் அதானி குழுமம் அமைக்கவுள்ளது.

இந்த திட்டங்களுக்கான ஒப்புதல் கடிதத்தை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திடம் இலங்கை முதலீட்டு வாரியம் வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x