Published : 24 Feb 2023 04:26 PM
Last Updated : 24 Feb 2023 04:26 PM

அமெரிக்காவில் ‘ஜாம்பி’ போதை மருந்து அச்சுறுத்தல் - பின்புலம் என்ன?

நியூயார்க்: சைலாசின் அல்லது டிராங்க் என்று அழைக்கப்படும் மருந்து ஒன்று அமெரிக்காவில் மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. போதைப் பொருளாக அணுகப்படும் இந்த மருந்தால் தோல் அழுகல் உள்ளிட்ட கொடிய விளைவுகள் ஏற்படுத்துவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இந்த சைலாசின் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த மருந்து கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்தவே உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பசு, குதிரை, பன்றி போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சைக்கு முன் மயக்கமுட்டுவதற்கே இந்த மருந்து கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், மிக சமீப நாட்களில், இந்த மருந்து சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக நியூயார்க் போஸ்ட் உள்ளிட்டவை குறிப்பிட்டுள்ளன. அதாவது, இம்மருந்தை அமெரிக்க இளைஞர்கள் போதை மருந்தாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இம்மருந்தை அளவுக்கதிகமாக மனிதர்கள் பயன்படுத்துவதன் மூலம் விரும்பதகாத உடல் மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ‘ஜாம்பி’ என்ற வார்த்தையை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

என்ன நடக்கிறது? - அமெரிக்காவின் பிலடெல்பியாவின் தெருக்களில் விற்கப்படும் புதிய ஜாம்பி மருந்தால்தான் இந்தப் பிரச்சனை எழுந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஜாம்பி மருந்தைப் பயன்படுத்துபவர்களில் தோலில் காயங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் மயக்க நிலை மற்றும் சோர்வு நிலைக்கு இட்டுச் செல்லுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஜாம்பி மருந்தை பயன்படுத்திய இளைஞர் ஒருவர் கூறும்போது, “இந்த மருந்து மனித உடல்களை ஜோம்பி போல் மாற்றுகிறது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு வரை, எனது தோலில் காயங்கள் இல்லை. ஆனால், என் கால்களில் தற்போது துளைகள் உள்ளன” என்றார்.

ஜாம்பி மருந்தாக மருத்துவர்களால் அறியப்படும் இந்த கைலாசின் மருந்தை அதிகப்படியாக பயன்படுத்தியவர்கள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சியான தகவல்களை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x