Published : 10 Feb 2023 05:48 AM
Last Updated : 10 Feb 2023 05:48 AM

தொழில் தொடங்குவதை எளிதாக்க நடப்பு ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் ஒற்றைச் சாளர கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்

புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 32 மத்திய அரசு துறைகள் நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தேசிய ஒற்றைச்சாளர கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்று மத்திய தொழில்மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இந்தக் கட்டமைப்பின் வழியே நிறுவனங்கள் தங்கள் தொழில் தொடர்பான அரசு அனுமதிகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

தொழில் தொடங்குதலை எளிமையாக்கும் வகையில் ஒற்றைச் சாளர கட்டமைப்பை மத்திய அரசு 2021 ஆண்டு முன்னெடுத்தது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்களிடமிருந்து தொழில் செயல்பாடுகள் தொடர்பான அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். அனுமதி விண்ணப்பங்களின் நிலையையும் கண்காணிக்க முடியும்.

இதுவரையில் இந்தக் கட்டமைப்பில் ஆந்திர பிரதேசம், பிஹார், கோவா, குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா உட்பட 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 27 மத்திய அரசுதுறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் மீதமுள்ள மாநிலங்களை இணைக்க மத்திய அரசு முயற்சிமேற்கொண்டுவருகிறது.

இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேம்பாட்டுத் துறை செயலர் அனுராக் ஜெயின் கூறுகையில், “நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் ஒற்றைச் சாளர அமைப்பின் கீழ் கொண்டுவரப்படுகிறது. மத்திய, மாநில அரசுத் துறைகள் இந்தக் கட்டமைப்பின் கீழ் இருக்கும். தொழில் அனுமதி தொடர்பான அனைத்து நடைமுறைகளும் இனி வெளிப்படையானதாக மாறும்” என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x