Published : 25 Dec 2022 06:56 AM
Last Updated : 25 Dec 2022 06:56 AM

பங்குச் சந்தை கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.4 லட்சம் கோடி இழப்பு

புதுடெல்லி: இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவால், கடந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளும் தொடர்ந்து 4 நாட்களாக சரிவை சந்தித்தன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 981 புள்ளிகள் (1.61%) சரிந்து 59,845-ல் நிலை பெற்றது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 320 புள்ளிகள் (1.77%) சரிந்து 17,807-ல் நிலை பெற்றது. இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.8.42 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்டக் செக்யூரிட்டிஸ் துணைத் தலைவர் (தொழில்நுட்ப ஆராய்ச்சி) அமோல் அத்வாலே கூறும்போது, “சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் 3-வது காலாண்டு ஜிடிபி எதிர்பார்த்த அளவைவிட கூடுதலாக உள்ளது. ஆனாலும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இதுவும் பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது” என்றார். கடந்த 4 வர்த்தக நாட்களில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x