Published : 13 Nov 2016 12:43 PM
Last Updated : 13 Nov 2016 12:43 PM

டாடா குழுமத்தில் முற்றுகிறது மோதல்: டாடா குழும இயக்குநர் குழுவில் இருந்து நுஸ்லி வாடியாவை நீக்க நடவடிக்கை

டாடா குழும நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இருந்து சைரஸ் மிஸ்திரி மற்றும் நுஸ்லி வாடியாவை நீக்க டாடா சன்ஸ் நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். ஆனால் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் இயக்குநர் பொறுப்புகளில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்க முடியவில்லை.

சில நாட்களுக்கு முன்பு டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சிலர் சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவாக இருந்ததால் அவரை நீக்க முடியவில்லை. இயக்குநர் குழுவில் சிலர் சைரஸ் மிஸ்திரிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அதற்கு நுஸ்லி வாடியாவின் பங்கு இருப்பதாக டாடா சன்ஸ் நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா கெமிக்கல்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரியும், இயக்குநர் குழுவில் நுஸ்லி வாடியாவும் இருக்கின்றனர்.

இதனால் சைரஸ் மிஸ்திரியை அடுத்து வாடியாவையும் நீக்குவதற்கான நடவடிக்கையில் டாடா சன்ஸ் இறங்கி இருக்கிறது. நுஸ்லி வாடியா, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் 1998-ம் ஆண்டு முதல் இருக்கிறார். டாடா கெமிக்கல்ஸ் இயக்குநர் குழுவில் 1981-ம் ஆண்டு முதல் இருக்கிறார். தவிர பாம்பே டையிங் மற்றும் பிரிட்டானியா ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும் அவர் இருக்கிறார்.

டாடா குழும நிறுவனங்கள் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, மிஸ்திரி மற்றும் வாடியாவை நீக்க தீர்மானம் நிறைவேற்றுமாறு நிறுவனங்களுக்கு டாடா சன்ஸ் தெரிவித்திருக்கிறது.

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் நீக்கப்பட்ட பிறகு குழும நிறுவனங்களில் இருந்து சைரஸ் வெளியேற வேண்டும் என்பது டாடா சன்ஸ் எதிர்பார்ப்பு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மிஸ்திரி வட்டாரங்கள் கூறும்போது டாடாவின் எதிர்பார்ப்பு இயல்புக்கு மாறானது. காரணம் இல்லாமல் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பிறகு பாரம்பரியம் மற்றும் குழுமத்தின் மதிப்பு ஆகியவற்றை இந்த விஷயம் கடந்து சென்று விட்டது என்று கூறினர்.

டாடா குழுமத்தில் பட்டியலிடப் பட்ட நிறுவனங்களில் 7 நிறுவனங் களில் சைரஸ் மிஸ்திரி இருக்கிறார். இதில் டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் பங்கு 73.3 சதவீதம் இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து மிஸ்திரி நீக்கப்பட்டு இடைக்கால தலைவராக இஷாத் ஹூசைன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் மற்ற நிறுவனங்களில் டாடா சன்ஸ் பங்கு 30 முதல் 39 சதவீதம் வரை உள்ளது. அதனால் இந்த நிறுவனங்களில் நிறுவன முதலீட்டாளர்களின் முடிவு முக்கியமானதாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டாடா கெமிக்கல்ஸ் இயக்குநர் பாஸ்கர் பட் ராஜினாமா

டாடா கெமிக்கல்ஸ் இயக்குநர் குழு முக்கியமான பல விஷயங்களில் தன்னுடைய கருத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் ராஜினாமா செய்வதாக இயக்குநர் குழு உறுப்பினர் பாஸ்கர் பட் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் குழுவில் மிஸ்திரியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினேன். ஆனால் மற்ற இயக்குநர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நான் எழுப்பிய விவகாரம் விவாதிக்கப்படவில்லை. சைரஸ் மிஸ்திரி மீது டாடா சன்ஸ் நம்பிக்கை இழந்துவிட்ட பிறகும் அவர் தலைவராக தொடர்வது நிறுவனத்துக்கு நல்லதல்ல என்பதால் ராஜினாமா செய்கிறேன் என்றார்.

ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்கு உரியவர் பாஸ்கர் பட். டாடா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர். முன்னதாக டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்கு நராக 2002-ம் ஆண்டு முதல் இருக்கிறார்.

இதற்கிடைய செபி தலைவர் யூ.கே.சின்ஹா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, நிறுவனத்தின் இயக்குநர் குழு நிறுவனத்தின் நலன் சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x