Published : 05 Oct 2016 10:38 AM
Last Updated : 05 Oct 2016 10:38 AM
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு கடந்த காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர்) 12 சதவீதம் உயர்ந்து ரூ.16.11 லட்சம் கோடியாக இருக்கிறது. பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாண்ட சொத்து மதிப்பு ரூ.14.41 லட்சம் கோடியாக இருந்தது. அதிக சொத்துகளை கையாளுவதில் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ், பிர்லா சன்லைப் மற்றும் எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட்கள் உள்ளன. ஐசிஐசிஐ மியூச்சுவல் பண்ட் அதிகபட்சமாக ரூ.2,15,986 கோடியைக் கையாளுகிறது.
கடந்த சில வருடங்களாகவே மியூச்சுவல் பண்ட் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி முடிவில் இந்த துறை கையாண்ட சொத்துமதிப்பு ரூ.3.26 லட்சம் கோடி மட்டுமே. இப்போது ஐந்து மடங்குக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
ரூ.10 லட்சம் கோடி என்னும் முக்கிய மைல் கல்லை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் எட்டியது. அடுத்த இரு வருடத்துக்குள் ரூ.16 லட்சம் கோடியை எட்டிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT