Published : 13 Jun 2022 01:11 PM
Last Updated : 13 Jun 2022 01:11 PM

ரூ.675-க்கு கீழே சரிந்தது எல்ஐசி பங்குகள்: கலக்கத்தில் முதலீட்டாளர்கள்

மும்பை: பங்குச்சந்தை இன்று கடும் சரிவு கண்டு வரும் நிலையில் எல்ஐசி பங்குகள் ரூ.675-க்கு கீழே சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பொதுபங்கு வெளியீடு மே. 4-ம் தேதி தொடங்கி மே.9-ம் தேதி வரை நடைபெற்றது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்பட்டு பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.

முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்ஐசி ஒரு பங்கு ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்த விலையைக் காட்டிலும் 8 சதவீதம் விலை குறைந்தே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஒரு பங்கு ரூ.867 என்ற அளவில் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. அதன் பிறகு தொடர்ந்து எல்ஐசி பங்குகள் சரிவு கண்டே வந்தது. வெளியீட்டு விலையை கூட எட்டவில்லை.

பட்டியலிடப்பட்டபோது, அதன் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட 8% சரிந்ததால் எல்ஐசி மதிப்பில் ரூ.46,500 கோடியை இழந்தது. அதன்பிறகு பங்குகள் மீளவில்லை.
எல்ஐசி பங்கு இன்று மேலும் சரிவடைந்து 779.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய விலை ஒப்பிடுகையில் 2.72 சதவீதம் குறைந்துள்ளது.

இதன் மூலம் சந்தை மூலதனத்தின் மதிப்பு முதல்முறையாக ரூ.5 லட்சம் கோடிக்கு கீழே குறைந்தது. இந்தநிலையில் இன்று பங்குச்சந்தை கடும் சரிவு கண்டு வரும் நிலையில் எல்ஐசி பங்குகள் ரூ.675 க்கு கீழே சரிந்தது.

‘‘எல்ஐசி பங்கு விலையில் ஏற்பட்டுள்ள தற்காலிக வீழ்ச்சி குறித்து நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். எல்ஐசியின் அடிப்படைகளை புரிந்து கொள்ள மக்கள் நேரம் எடுப்பார்கள். எல்ஐசி நிர்வாகம் இந்த அம்சங்களை ஆராய்ந்து பங்குதாரர்களின் மதிப்பை உயர்த்தும்" என்று டிஐபிஏஎம் செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறியுள்ளார்.

எல்ஐசி ஐபிஓ மூலம் அதிகம் பாதிக்கப்பட்டது சிறு முதலீட்டாளர்களும், பாலிசிதாரர்களும், எல்ஐசி ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x