Published : 03 Jun 2022 01:49 PM
Last Updated : 03 Jun 2022 01:49 PM

‘மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்வது எளிதே’ - சில அடிப்படை புரிதல்கள்

பங்குச்சந்தை பற்றிய தகவல்கள் பற்றி தெரியும் பலருக்கும் அதில் முதலீடு செய்ய ஆசை ஏற்படும். ஆனால், பங்குச்சந்தை என்பது ஆபத்து என்பதும், முதலீட்டுத் தொகை நஷ்டமடைய கூடிய ஆபத்து உள்ளது என்பதால் அதில் முதலீடு செய்ய பலருக்கும் தயக்கம் இருக்கும்.

இதுமட்டுமல்லாமல் பங்குச்சந்தையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். அதனை கற்று, புரிந்துகொண்டு முதலீடு செய்வதில் சிக்கல் இருப்பதால் தனக்கு பதில் யாராவது இதனைச் செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அதற்காக ஒரு எளிய வழி மியூச்சுவல் பண்ட்.

முதலீட்டாளர் தனது வசதிக்கேற்ப முதலீட்டு விருப்பத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம் அல்லது முறையான முதலீட்டுத் திட்டம் (எஸ்ஐபி) மூலம் மாதந்தோறும் முதலீடு செய்யலாம். எஸ்ஐபியில் மாதம் வெறும் ரூ.100 மட்டுமே கூட முதலீடு செய்யலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதில் உங்கள் முதலீட்டை அதிகரிக்கலாம்.

மியூச்சுவல் பண்ட் நிதிகள் பங்குச்சந்தை, தங்கம், கடன் பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்யப்படுகின்றன. ஈக்விட்டி அல்லது குரோத் பண்டுகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்பவை `டெப்ட் பண்டுகள்’ (Debt Funds). டெப்ட் பண்டுகளை, 'இன்கம் பண்டுகள்' என்றும் அழைப்பதுண்டு. பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய இரண்டு வகைகளிலும் முதலீடு செய்வது ஹைபிரிட் பண்டுகள் என மூன்று வகையான முதலீடுகள் இருக்கின்றன.

ஈக்விட்டி பண்டுகள் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றவை. அதிக லாபம் கிடைக்கும். எனினும் அதே அளவு ரிஸ்கும் இந்த பண்டுகளில் உள்ளது. இந்த பண்டுகளில் கிடைக்கும் லாபம் மற்ற பண்ட் முதலீடுகளை விடவும் அதிகம்.

ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் என 15 வருடத்திற்கு 15,00,000 லட்சம் ரூபாய் முதலீட்டினை செய்வதாக வைத்துக்கொண்டால் மியூச்சுவல் பண்ட் வருமானம் வருடத்திற்கு சராசரியாக 15 சதவீதமாக இருக்கும். அதாவது 15 ஆண்டுகளுக்கு பின்பு மொத்தம் சுமார் 42 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புண்டு.

டெப்ட் பண்டுகள் எனப்படும் கடன் பத்திரங்கள் முதலீடு செய்வது. இந்த வகை பண்டுகள் பாதுகாப்பானதாகவும், வருவாய்க்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. அரசு பத்திரங்கள் அல்லது பாண்டுகள், கடன் பத்திரங்கள், வங்கி டெபாசிட்களின் சான்றிதழ்கள் மற்றும் டிரஷரி பில்கள் போன்றவற்றில் இந்த முதலீடு செய்யப்படுகிறது.

அடுத்தது ஹைபிரிட் பண்டுகள். இது ஓரளவு ரிஸ்க் மற்றும் நிலையான வருவாய் வரக்கூடிய முதலீடு. அக்ரசிவ் பேலன்ஸ்டு பண்ட்கள், கன்சர்வேட்டிவ் பேலன்ஸ்டு பண்ட்கள், பென்ஷன் திட்டங்கள், குழந்தை திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருவாய் திட்டங்களில் இந்த பண்ட் முதலீடு செய்கிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். கார் வாங்குவது, குழந்தைகளின் படிப்பு, திருமணம் போன்ற எந்த இலக்கை அடைய முதலீடு செய்ய விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். இதில் மதிப்பிடப்பட்ட வருமானம், காலம், ஆபத்து, பிற அம்சங்களை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டால் இலக்குக்கு ஏற்ப திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதை எளிதாக்கும்.

நீண்ட காலக் கண்ணோட்டத்தில் ஒருவர் மியூச்சுவல் பண்டுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று பொதுவாக ஆலோசகர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து போர்ட்போலியோவைக் கண்காணிக்க வேண்டும். நிதி அல்லது போர்ட்போலியோவை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் இலக்குகளுக்கு ஏற்ப போர்ட்போலியோவை மாற்றுவது எளிதாக இருக்கும்.

> இது, நெல்லை ஜெனா எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x