Published : 13 May 2022 07:35 AM
Last Updated : 13 May 2022 07:35 AM

நிறுவனங்களுக்கு வழங்கிய கடனை வசூலிக்க திவால் நடவடிக்கை எடுக்கலாம் - வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: நிறுவனங்களுக்கு கடன் அளிக்க சொந்த ஜாமீன் அளித்தவர்கள் மீது கடனை வசூலிக்க திவால் நடவடிக்கையை வங்கிகளே எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் வாராக் கடனை வசூலிக்க தீர்ப்பாயத்தை அணுகி நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நடைமுறை வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு குறையும். கடனும் வசூலாகும்.

இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தொழிலதிபர் மகேந்திர குமார் ஜஜோடியா இடையிலான வழக்கில் என்சிஎல்ஏடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த வழக்கில் நிறுவனங்கள் மீதுதான் திவால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தனிப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொந்த ஜாமீன் வழங்கிய நபரிடம் இருந்து கடனை வசூலிக்கும் நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளித்து என்சிஎல்ஏடி அளித்த தீர்ப்பை ரத்து செய்தது.

என்சிஎல்ஏடி வழங்கிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறுக்கிட விரும்பவில்லை என்றும், அதேசமயம் வங்கிகள் கடன் பெறுவதற்கு சொந்த ஜாமீன் அளித்த தனி நபர்கள் மீது கடனை வசூலிக்க திவால் நடவடிக்கையை எடுக்கலாம் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 1.6 லட்சம் கோடி கடன் தொகையில் சொந்த ஜாமீன் அளித்தவர்கள் மீது திவால் நடவடிக்கை எடுத்து கடனை வசூலிக்க வழி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x