Published : 05 Feb 2016 10:08 AM
Last Updated : 05 Feb 2016 10:08 AM

ஐடி துறை ஏற்றுமதி வளர்ச்சி 10-12 சதவீதமாக இருக்கும்: நாஸ்காம் கணிப்பு

அடுத்த நிதி ஆண்டில் ஐடி/பிபிஓ துறையின் வளர்ச்சி குறைந்து 10 சதவீதம் முதல் 12 சதவீதமாக இருக் கும் என்று ஐடி துறை அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்த சரிவு இருக்கும் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் 12-14 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நாஸ்காம் கணித்திருந்தது. கணிக்கப்பட்டதை போலவே 12.3 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 29 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இது இந்த துறையை பாதிக்கிறது. ஐடி துறைக்கு வரும் வருமானத்தில் 80 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வருகிறது.

புதிய நிறுவனங்களின் வருகை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வருகை, பிக்டேட்டா ஆகிய காரணங்களால் நடப்பு நிதி ஆண்டில் ஐடி துறையின் ஏற்றுமதி மதிப்பு 10,780 கோடி டாலராக இருக்கும். உள்நாட்டு நுகர்வு மற்றும் ஹார்ட்வேர் ஆகியவற்றை சேர்க்கும் போது இந்த துறையின் 14,300 கோடி டாலராக இருக்கும்.

ஸ்டார்ட்அப் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக இந்த துறையின் வருமானம் உயரும் என்று நாஸ்காம் தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

நடப்பு நிதி ஆண்டில் இந்த துறையில் கூடுதலாக 2 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மொத்தம் 37 லட்சம் பணியாளர்கள் இந்த துறையில் பணிபுரிகின்றனர். தவிர நடப்பு நிதி ஆண்டில் 700 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு இந்த துறைக்கு வந்திருக்கிறது. இதில் 500 கோடி டாலர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வந்ததும் அடக்கம்.

வரும் 2030-ம் ஆண்டில் இந்திய ஐடி நிறுவனங்களின் வருமானம் 35,000 கோடி டாலர் அளவுக்கு உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்தியாவில் 4,200 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் 1,200 புதிய நிறுவனங்கள் தொடங்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டு ஐடி/பிபிஓ துறையின் வருமானம் 10 சதவீதம் வளர்ந்து 1.41 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். அடுத்த நிதி ஆண்டில் 11 சதவீதம் முதல் 13 சதவீத வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் மதிப்பில் அடுத்த நிதி ஆண்டில் ரூ.1.56 லட்சம் கோடி முதல் 1.59 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x