Published : 17 Feb 2016 10:05 AM
Last Updated : 17 Feb 2016 10:05 AM

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.9,154 கோடி: மாநில நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் தகவல்

தமிழகத்தின் வருவாய் பற்றாக் குறை வரும் நிதி ஆண்டில் ரூ. 9,154 கோடி அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவை விட மிக அதிகம் என்று மாநில நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் க. சண்முகம் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையில் மாநில நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் 2016-2017-ம் நிதி ஆண்டுக் கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பட் ஜெட் சிறப்பம்சங்களை விளக்கிய சண்முகம், மேலும் கூறியது:

இது இடைக்கால பட்ஜெட். எனவே ஒட்டுமொத்தமாக ரூ.1,98,689 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருவாய் ரூ.1,52,004 கோடியாகும். செலவு ரூ.1,61,159 கோடி. இதனால் பற்றாக்குறை ரூ.9,154 கோடியாகும். மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 9 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.36,740 கோடியாக இருக்கும் என தெரிகிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் பற்றாக்குறை 2.92 சதவீதத்துக்குள்ளாக உள்ளது. தேசிய அளவில் அனுமதிக்கப்பட்ட அளவு 3 சதவீதமாகும். அந்த வகையில் பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பதாக அவர் கூறினார். மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.35,168 கோடி. இது வரையறுக்கப்பட்ட அளவான 25 சதவீதத்துக்கும் கீழாக உள்ளது. தேக்க நிலை நிலவியபோதிலும் மாநிலத்தின் வரி வருமானம் 10 சதவீதம் முதல் 12 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

இது இடைக்கால பட்ஜெட் என்பதால் எவ்வித புதிய வரி விதிப்பும் மேற்கொள்ளப்பட வில்லை. அதேபோல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருப்பினும் ஏற்கெனவே மேற்கொள்ளப்படும் சமூக மேம் பாட்டுத் திட்டங்களுக்கான ஒதுக் கீடு தொடர்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.57,071 கோடியாகும். இது பட்ஜெட் அளவில் 35.41 சதவீதம் என்று சண்முகம் குறிப் பிட்டார்.

பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்புக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைவால் மாநில அரசுக்கு வர வேண்டிய வருமானம் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவால் அரசுக்கு ஏற்படும் இழப்பை வரியை உயர்த்தி ஈடுகட்டியுள்ளனர். ஆனால் அதை தமிழக அரசு செய்யவில்லை என்றார்.

பொருளாதார தேக்க நிலை காரணமாக பல்வேறு திட்டப் பணிகளில் தேக்கம் காணப் படுகிறது. இருப்பினும் எந்த திட்டப் பணியையும் அரசு நிறுத்தவில்லை என்றார். சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.57,071 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் அளவில் 35.41 சதவீதமாகும்.

பல்வேறு திட்டங்களுக்கான செலவினங்கள் முடங்கவில்லை. ஆனால் மெதுவாக நடைபெறு கின்றன. பொருளாதார தேக்க நிலைதான் இதற்கு காரணம். வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் முதல் 20 சதவீத அளவுக்கு இருக்கும்போது திட்டப் பணிகள் வேகமாக நடைபெறும். ஆனால் வளர்ச்சி விகிதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக சரிந்துள்ளது என்று அவர் கூறினார்.

வர்த்தக வரி வருமானம் ஒட்டு மொத்தமாக ரூ. 72,326 கோடி கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி வரி ரூ. 7,101 கோடி, பத்திர முத்திரைத்தாள் மூலம் ரூ. 10,548 கோடியும், போக்குவரத்து பிற இனங்கள் வாயிலாக ரூ. 4,925 கோடியும் ஆக மொத்தம் 96,531 கோடி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மத்திய அரசு நலத்திட்டங் களுக்கான ஒதுக்கீட்டு அளவைக் குறைத்ததால் மாநிலத்தின் நிதிச் சுமை சுமார் ரூ. 1,400 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மந்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1,773 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் ஏற்கெனவே ரூ.. 1,000 கோடி வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 773 கோடி அரசுக்குக் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசுகள் கடன் வாங்குவதில் தவறில்லை. அவை மாநில ஒட்டுமொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட வரம்பை மீறாத அளவுக்கு இருக்கவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x