Published : 02 Nov 2015 08:54 AM
Last Updated : 02 Nov 2015 08:54 AM

அந்நிய முதலீடு ரூ.22,350 கோடி: 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம்

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தைக்கு 22,350 கோடி ரூபாய் நிகர அந்நிய முதலீடு வந்திருக்கிறது. இந்த தொகை கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

இந்திய சந்தைக்கு வந்திருக்கும் 22,350 கோடி ரூபாய் அந்நிய முதலீட்டில் பெருமளவு கடன் சந்தைக்கு வந்திருக்கிறது. பங்குச்சந்தைக்கு 6,650 கோடி ரூபாயும், கடன் சந்தைக்கு 15,700 கோடி ரூபாயும் வந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 20,723 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வந்தது. அதன் பிறகு அதிக முதலீடு வந்திருப்பது கடந்த அக்டோபர் மாதத்தில்தான்.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரு மாதங்களில் சுமார் ரூ.23,000 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து 27,697 கோடி ரூபாய் பங்குச்சந்தையிலும், 55,096 கோடி ரூபாய் கடன் சந்தையிலும் வந்திருக்கிறது.

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை

இந்த வாரம் முக்கியமான நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வருகின்றன. தவிர பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு முடிவுகள் வரும் நவம்பர் 5-ம் தேதி வெளியாகின்றன. இது நடுத்தர காலத்தில் சந்தையை பாதிக்கும். 8-ம் தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. அதனைப் பொறுத்து சந்தையின் போக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தவிர, டிஎல்எப், இந்தியன் ஆயில், பவர் கிரிட், டெக் மஹிந்திரா, பஞ்சாப் நேஷனல் வங்கி, செயில், எஸ்பிஐ, சிப்லா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

காபி டே பங்கு

இன்று காபி டே நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. 20 கோடிக்கும் மேலான பங்குகள் பட்டியலிடப்படுகின்றன. இந்த பங்கு பிஎஸ்இ-யின் குரூப் பி பிரிவில் வர்த்தகமாகும். ஒரு பங்கின் விலை 328 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x