Published : 20 Jan 2021 09:14 AM
Last Updated : 20 Jan 2021 09:14 AM
நிதி ஆயோக், இரண்டாவது இந்திய புதுமை குறியீட்டெண் 2020-ஐ காணொலி வாயிலாக ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடவிருக்கிறது. நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், தலைவரும் நிர்வாக இயக்குநருமான அமிதாப் கண்ட் ஆகியோர் முன்னிலையில், நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் இந்தக் குறியீட்டெண்ணை வெளியிடுகிறார்.
முதலாவது புதுமை குறியீட்டெண், கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது குறியீட்டெண் வெளியிடப்படவிருப்பது, புதுமையால் உந்தப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி நாட்டை மாற்றுவதற்காக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளை பறைசாற்றுகிறது.
புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு வழங்கி, அதன்மூலம் தங்களது புதுமையான கொள்கைகளை மேம்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கான தரவரிசையை இந்திய புதுமை குறியீட்டெண் 2020 வழங்குகிறது. புதுமையான கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் தேசிய தலைவர்களிடமிருந்து மாநிலங்கள் கற்றறியும் வகையில் தரவரிசை வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடையே ஆரோக்கியமான போட்டி நிலவ, இந்த முயற்சி வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை முறையாக ஒப்பிடும் வகையில் 17 முக்கிய மாநிலங்கள்; 10 வடகிழக்கு, மலைப் பிரதேச மாநிலங்கள்; 9 நகர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்று அவை பிரிக்கப்பட்டுள்ளன. `விளைவு’, `ஆளுமை’ என்ற இரண்டு பெரும் பிரிவுகளில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் வரிசைபடுத்தப்படுகின்றன. நேரடியாக அளவிடக்கூடிய தரவு (32 அலகுகள்), 4 இணைந்த அலகுகளென மொத்தம் 36 அலகுகள் இந்திய புதுமை குறியீட்டெண் 2020-இன் கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT