Published : 20 Jan 2021 06:54 AM
Last Updated : 20 Jan 2021 06:54 AM

சர்ச்சைக்குரிய கொள்கையை திரும்ப பெற வேண்டும்: வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இந்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ் அப் சமீபத்தில் ஒரு கொள்கை முடிவை வெளியிட்டது. இதை ஏற்போர் மட்டுமே உறுப்பினர்களாக செயல்பட முடியும் என்றும் அதற்கு கடைசி நாள் பிப்ரவரி 8 என்றும் கெடு விதித்துள்ளது.

புதிய கொள்கையின்படி பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிர்வதற்குபயனாளர்களின் அனுமதியை கோரியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அடுத்தடுத்து வந்தவிளக்கங்களில் அதை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதன் காரணமாக பல பயனாளர்கள் மாற்றுதகவல் பரிமாற்ற செயலிகளான சிக்னல், டெலிகிராம் போன்றவற்றுக்கு மாறத் தொடங்கினர்.

இந்நிலையில், இந்த சர்ச்சைக்குரிய புதிய கொள்கையைத் திரும்பப் பெறுமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ள மத்திய அரசு, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பான அரசின் கடிதம் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுதலைமைச் செயல் அதிகாரி வில்கேத்கார்டுக்கு அனுப்பப்பட் டுள்ளது.

இந்திய பயனாளர்களின் தகவல்கள் மற்றும் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிர்வது, பாதுகாப்பானது அல்ல என்றும் அது மேலும் பல சிக்கலை உருவாக்கும் என்றும் அரசுகருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் அணுகுமுறையானது அதாவது புதிய கொள்கைகளை ஏற்க வேண்டும் அல்லது நிறுவனத்தின் பயன்பாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்பது சரியான நிலைப்பாடு அல்ல என்றும் அரசின் கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இந்திய பயனாளர்களை நடத்தும் விதத்திற்கும், ஐரோப்பியபயனாளர்களை நடத்தும் விதத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்றும் இதில்மிகுந்த பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை அரசுமிகவும் தீவிரமான பிரச்சினையாகக் கருதுகிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x