Last Updated : 11 Oct, 2015 12:07 PM

 

Published : 11 Oct 2015 12:07 PM
Last Updated : 11 Oct 2015 12:07 PM

தவறான குற்றச்சாட்டில் நீக்கம்: மைக்ரோமேக்ஸ் மீது வழக்கு தொடர முன்னாள் தலைவர் முடிவு

தலைவர் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக தன்னை நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார்.

2000-வது ஆண்டில் உருவான இந்த நிறுவனத்தின் முதலாவது தலைவராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சஞ்சய் கபூர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு சஞ்சய் கபூர் ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுவனத்திலிருந்து சஞ்சய் கபூர் வெளியேறப் போவதாக மைக்ரோமேக்ஸ் அறிவித்தது. ஆனால் அவர் வலுக்கட்டாயமாக தலைவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார்.

நிதி முறைகேடு காரணமாக தலைவர் பதவியிலிருந்து அவர் கட்டாயமாக வெளி யேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தன்னை வெளியேற்றியது முறைகேடான நடவடிக்கை என்று மைக்ரோமேக்ஸ் இயக்குநர் குழுவுக்கு சஞ்சய் கபூர் கடிதம் எழுதியுள்ளார். இரண்டு பக்க கடிதத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் பங்குகள் கிடைக்காமல் செய்வதற்காக தன்னை நீக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 27-ம் தேதியிட்ட அந்த கடிதத்தில் ஜூலை 10-ம் தேதி தான் நீக்கப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட கடிதத்தில் பெட்ரோலுக்கு அதிகம் செலவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தனக்கு நோட்டீஸ் ஏதும் அனுப்பவில்லை என்றும், தனது விளக்கத்தைகூட நிர்வாகம் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்காக தான் எந்த பில்லையும் நிறுவனத்துக்கு அளித்தது கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறான குற்றச்சாட்டு

எரிபொருள் செலவுக்கென நிறுவனத்திலிருந்து தமக்கு எந்த தொகையும் வழங்கப்படவில்லை என்றும் நிறுவனத்துக்கும் ஒரு பெட்ரோல் நிரப்பு நிலையத்துக்கும் ஒப்பந்தம் உள்ளது. நிறுவன வாகனங்கள் இங்கு பெட்ரோலை நிரப்பும். அதற்குரிய தொகையை நிறுவனம் செலுத்திவிடும். இந்த நிலையில் அதிக எரிபொருள் தொகை கோரியதாக நிர்வாகம் கூறியது தன்மீது வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கும் செயல் என்று அவர் கூறினார்.

ஊழியர்களுக்கான பங்குகளை சலுகை விலையில் பெறுவதற்கு தனக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. ஆனால் அதை கொடுக்கக்கூடாது என்பதற்காக தன்மீது களங்கம் கற்பித்து வெளியேற்றிவிட்டதாக கபூர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைவராக தான் பதவி வகித்த காலத்தில் நிறுவன வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாகவும், நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. தனது முயற்சிக்கு பலன் கிடைக்கும் நேரத்தில் தான் வெளியேற்றப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தான் கூற வேண்டிய கருத்துகள் அனைத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டு விட்டதாகவும், இதன் நகலை மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகத்துக்கு (எம்சிஏ) அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு கோரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x