Published : 31 Aug 2015 09:57 AM
Last Updated : 31 Aug 2015 09:57 AM

ஆகஸ்ட் மாதத்தில் ரூ.17,555 கோடி அந்நிய முதலீடு வெளியேறியது

சர்வதேச சூழ்நிலை காரணமாக நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 17,555 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் 5,323 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 28-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து 16,936 கோடி ரூபாயும், இந்திய கடன் சந்தையில் இருந்து 619 கோடி ரூபாயும் வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (இன்று ஆகஸ்ட் 31) வர்த்தகம் இருப்பதால் இறுதி நிலவரத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கலாம்.

இதில் கருப்பு திங்கள் என்று சொல்லப்பட்ட கடந்த 24-ம் தேதி மட்டும் 5,173 கோடி ரூபாய் இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. அன்று மட்டும் சென்செக்ஸ் 1624 புள்ளிகள் சரிந்தது. நிப்டி 491 புள்ளிகள் சரிந்தது. கடந்த ஏழு வர்த்தக தினங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளை வெளியே எடுத்து வருகிறார்கள்.

நடப்பு ஆண்டில் தொடக் கத்தில் இருந்து இதுவரை பங்குச் சந்தையில் 27,463 கோடி ரூபாய் முதலீடும், கடன் சந்தையில் 38,732 கோடி ரூபாய் முதலீட்டையும் அந்நிய முதலீட்டாளர்கள் செய் திருக்கிறார்கள்.

மியூச்சுவல் பண்ட் நிறுவன முதலீடு உயர்வு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி இருந்தாலும், பங்குச்சந்தை சரிவினை பயன்படுத்தி மியுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 9,500 கோடி ரூபாய் அளவுக்கு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தில் 5,442 கோடி ரூபாய் மட்டுமே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஆகஸ்ட் 24 முதல் 27 தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 7,188 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது பங்குச்சந்தை அதிகமாக சரிந்த இந்த காலத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி முதலீடு செய்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x