Published : 07 Mar 2020 07:40 PM
Last Updated : 07 Mar 2020 07:40 PM

யெஸ் வங்கியில்  அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு: எஸ்பிஐ அறிவிப்பு 

திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்ட யெஸ் வங்கியில் அதிகபட்சமாக 10 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் எஸ் வங்கியை ஆர்பிஐ தன் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் வாடிக்கையாளர்களின் நிதியை பாதுகாக்கும் விதமாக மத்திய ரிசர்வ் வங்கி வரைவு மறுகட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் வங்கி முதலீட்டாளராகிறது. எஸ். வங்கியின் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட சேவை நிபந்தனைகளில் எந்த வித மாற்றமும் இல்லை. அதாவது குறைந்தது ஓராண்டுக்கு ஊழியர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆனால் முக்கிய மேலாண்மை பொறுப்புகள் குறித்து போர்டுதான் முடிவெடுக்கும். வரைவு மறுகட்டுமான திட்டத்தின் படி வங்கியின் அதிகாரப்பூர்வ மூலதனம் ரூ.5000 கோடியாகும். மொத்தம் 2400 கோடி பங்குகள், பங்கு ஒன்றின் விலை ரூ.2 என்பதன் மூலம் ரூ.4,800 கோடி மூலதனம். இதில் 49% பங்குகளை ஸ்டேட் வங்கி வாங்குகிறது.

புதிய போர்டும் உருவாக்கப்படுகிறது, இதில் ஒரு நிர்வாக இயக்குநர், சி.இ.ஓ மற்றும் சேர்மன், 2 செயல்முறையல்லாத இயக்குநர்கள் என்று குறைந்தது 6 பேர் இந்த போர்டில் இருப்பார்கள். 2 இயக்குநர்களை எஸ்பிஐ நியமிக்கும். போர்டு உறுப்பினர்கள் ஓராண்டுக்கு பதவி வகிப்பார்கள்.

இந்தநிலையில் யெஸ் வங்கியின் மறுவரைவு திட்டம் குறித்து எஸ்பிஐ தலைவர் ரஜினிஷ் குமார் கூறியதாவது:

யெஸ் வங்கியில் 49 சதவீதம் வரை பங்குகளை பெற முடிவு செய்துள்ளோம். மிக குறைந்த அளவு 26 சதவீத பங்குகளை வாங்குவோம். எவ்வளவு பங்குகள் என்பது வாரியக் கூட்டத்துக்கு பிறகு தான் முடிவாகும். உடனடியாக ரூ. 2,450 கோடி ரூபாயை யெஸ் வங்கியில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிகபட்மாக 10 ஆயிரம் கோடி வரையில் அந்த வங்கியில் முதலீடு செய்யலாம். இதனை வரைவு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளோம். தேவை மற்றும் நிலைமையை கருத்தில் கொண்டு முதலீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x