Last Updated : 27 Aug, 2015 10:28 AM

 

Published : 27 Aug 2015 10:28 AM
Last Updated : 27 Aug 2015 10:28 AM

ஐஓசி பங்கு விலக்கல்: 86% பங்குகளை வாங்கியது எல்ஐசி

பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), பங்கு விலக்கல் நடவடிக்கைக் காக ஓஎப்எஸ் முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பங்குகளை விற்ற போது 86 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை பங்குச் சந்தையில் கடுமையான சரிவு காணப்பட்டது. சீன பங்குச் சந்தை யில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி யாக இந்தியப் பங்குச் சந்தை 1624 புள்ளிகள் வரை சரிந்தது. அன்றைய தினம்தான் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கு விலக்கல் நடவடிக்கையை மேற்கொண்டது. ஆஃபர் ஃபார் சேல் அடிப்படையில் மேற்கொள் ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, ஐஓசியின் ஒரு பங்கு விலை ரூ. 387 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

பங்குச் சந்தை கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில் ஐஓசி பங்கு விற்பனை நிர்ணயித்தபடி நடக்க வேண்டும் என்பதற்காக எல்ஐசி-யின் உதவி நாடப்பட்டதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து எல்ஐசி நிறுவனம் மொத்தம் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டிருந்த பங்குகளில் 86 சதவீத பங்குகளை வாங்கியது.

இதன் மூலம் ஐஓசி நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு 11.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னர் இது 2.52 சதவீதமாக இருந்தது. மொத்தம் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது என்ற விவரம் உடனடியாக வெளியாகவில்லை. இருப்பினும் எதிர்பார்க்கப்பட்டதைவிட 1.18 தடவை கூடுதல் அளவுக்கு பங்குகளை வாங்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது.

இதற்கு முன்பும் இதேபோல பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல் நடவடிக்கையின்போது எல்ஐசி கணிசமான பங்குகளை வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும், கடந்த ஆண்டு செயில் நிறுவன பங்குகளையும் எல்ஐசி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்கள் கிழமை ஐஓசி பங்குகளை ஒரு பங்கு ரூ.387 என்ற விலையில் எல்ஐசி வாங்கியபோதிலும் வர்த்தகத்தின் முடிவில் ஐஓசி பங்கு விலை 4.11 சதவீதம் சரிந்து ரூ. 378.25 என்ற விலையில் வர்த்தகமானது. இந்த பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் அரசு ரூ. 9,379 கோடி திரட்டியுள்ளது.

எல்ஐசி நிறுவனம் பங்குகளை வாங்க முன்வராதிருந்தால் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் போயிருக்கும் என்று ஐடிபிஐ பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி அணீஷ் வாஸ்தவா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் அரசு நிர்ணயித்த படி பங்கு விலக்கல் விற்பனை நடைபெற்றாலும், பங்குச் சந்தை நிலை மேலும் சரிவடைந்து கொண்டேபோனால் பிறகு எல்ஐசியால் கூட காப்பாற்ற முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

இது போன்ற சூழலில் பங்கு விலக்கல் நடவடிக்கை குறித்து புதிய உத்தியை வகுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்றார்.

அரசு அடுத்த கட்டமாக கோல் இந்தியா, என்டிபிசி,. பிஇஎல் மற்றும் ஹிந்துஸ்தான் காப்பர் ஆகிய நிறுவனங்களில் 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

ஐஓசி தரவரிசை மாறாது

இதனிடையே பங்குச் சந்தை யில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தர வரிசை மதிப்பீட்டில் எத்தகையை மாற்றமும் இருக்காது என்று தரச்சான்று நிறுவனமான மூடி”ஸ் தெரிவித்துள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x