Published : 07 Aug 2019 11:40 AM
Last Updated : 07 Aug 2019 11:40 AM

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை: ஆபரணத் தங்கம் சவரன் ரூ.28 ஆயிரத்தைத் தாண்டியது

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகக் கணிசமாக உயர்ந்துவரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.568 உயர்ந்து, ரூ.28,352-க்கு விற்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி மீண்டும் அதிகரித்தது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை 584 ரூபாய் உயர்ந்து ரூ.27,064 ஆக விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்நிலையில் இன்று (ஆக. 7) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.568 உயர்ந்து, ரூ.28,352-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.3,544-க்கு விற்பனையாகிறது. இதுவே நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.27,784 ஆக இருந்தது.

பங்குச்சந்தை வீழ்ச்சியாலும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கி இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் இந்த விலை உயர்வு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x