Last Updated : 28 May, 2015 09:48 AM

 

Published : 28 May 2015 09:48 AM
Last Updated : 28 May 2015 09:48 AM

ஓராண்டில் 22,566 மெகாவாட் அதிகரிப்பு: பியூஷ் கோயல் பெருமிதம்

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற கடந்த ஒரு வருடத்தில் 22,566 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளோம். இதனால் நாட்டின் மின் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு 3.6 சதவீதமாக குறைந்துள்ளது என்று மின் துறை மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்.

தேசிய முற்போக்கு கூட்டணியின் ஒரு வருட சாதனைகள் குறித்து பேசியபோது கோயல் இவ்வாறு கூறினார். வளர்ச்சிக்கான கையேட்டினை வெளியிட்டு மேலும் அவர் பேசியதாவது.

ஒரு வருடத்தில் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிலக்கரி ஏலம் நடந்தது. அரசாங்கத்தின் எளிமையான அணுகு முறை, அதிகார வர்க்கத்தின் தலையீடு குறைவு ஆகிய காரணங்கள் பிரதமரின் அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்குக்கு உதவியாக இருக்கும். இந்தியாவில் 28 கோடி மக்கள் இன்னும் மின்வசதி இல்லாமல் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் 1,500 கிராமங்களுக்கு மின்வசதி செய்யப்பட்டுள்ளது.

புதுபிக்கத்தக்க எரிசக்தியை விநியோகம் செய்வதற்கு ரூ.38,000 கோடி அளவுக்கு ஒதுக்கவுள்ளோம். அதேபோல 100 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள 25 சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இதற்காக 17 சூரிய சக்தி பூங்காக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இதன் மூலம் 15,877 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தவிர படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதன் மூலம் 20,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த துறையில் அந்நிய முதலீடு வரவேற்கத்தகுந்தது. இவை அனைத்தும் சேர்ந்து 50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க முடியும். தற்போது கோல் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு 32 மில்லியன் டன் நிலக்கரியை வெட்டி எடுக்கிறது.

வரும் 2020-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் வெட்டி எடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிலக்கரி இறக்குமதியை தடுக்கும் திட்டம் அரசுக்கு தற்போது இல்லை. விரைவில் நாடு முழுவதும் 60 நிலக்கரி சுரங்கங்கள் திறக் கப்படும்.

எல்இடி விளக்குகள் பயன் பாட்டினை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் வைத்திருக்கிறது. இதன் மூலம் 27,000 மெகாவாட் மின்சார பயன்பாடு குறையும். இன்னும் மூன்று ஆண்டுகளில் அனைத்து விளக்குகளையும் எல்இடி விளக்குகளாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. 8 வட கிழக்கு மாநிலங் களின் மின்சார மேம்பாட்டுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கும். இதற்கு 9,865 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு மின் விநியோகம் செய்வதற்கு 26,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x