Published : 09 Apr 2015 10:10 AM
Last Updated : 09 Apr 2015 10:10 AM
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த பின்னரும், வங்கிகள் வட்டியை குறைக்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியதை அடுத்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதலில் வட்டி விகிதத்தை குறைத்தது.
இதை தொடர்ந்து ஹெச்.டி.எப்.சி. வங்கியும், ஐசிஐசிஐ வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தன.
எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி. ஆகிய வங்கிகள் அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவிதம் வரை குறைத்தன. ஐசிஐசிஐ வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரை குறைத்தது.
எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கிகளின் வட்டி குறைப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும். ஐசிஐசிஐ வங்கியின் வட்டி குறைப்பு ஏப்ரல் 13-ம் தேதி வரை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் நடுத்தர கால டெபாசிட்களுக்கான (ஒரு கோடி ரூபாய் வரை) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்திருக்கின்றன.
நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் நேற்று வட்டி குறைத்தது. அடிப்படை வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் வரை குறைத்தது. இப்போது 9.95 சதவீதமாக இந்த வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் இருக்கிறது. இந்த வட்டி குறைப்பு ஏப்ரல் 13-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்திருக்கிறது.
அதேபோல அனைத்து வகையான டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.
முக்கிய வங்கிகள் வட்டி குறைப்பு செய்ததை அடுத்த மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பில் ஈடுபடலாம் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT