Published : 27 Apr 2015 09:46 AM
Last Updated : 27 Apr 2015 09:46 AM
வீட்டுக்கடன் வழங்குவதில் முக்கிய நிறுவனமான ஹெச்டிஎப்சியில் அந்நிய முதலீடு உயர்ந்திருக்கிறது. மார்ச் காலாண்டு முடிவில் 79.65 சதவீத அந்நிய முதலீடு இந்த நிறுவனத்தில் உள்ளது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் அதிக அளவுக்கு அந்நிய முதலீடு உள்ள நிறுவனம் ஹெச்டிஎப்சி ஆகும். டிசம்பர் காலாண்டு முடிவில் அந்நிய முதலீடு 78.49 சதவீதமாக இருந்தது. 2013-ம் ஆண்டு செப்டம் பர் காலாண்டில் இருந்து அந்நிய முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருவது கவனிக்கத்தக்கது.
ஹெச்டிஎப்சி பங்கு தொடர்ந்து நல்ல வருமானத்தை கொடுத்து வருவதால் இந்த பங்கில் அந்நிய முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
2012 மே மாதம், இந்த நிறுவனத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை உயர்த்துவதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியது.
அந்நிய முதலீட்டாளர்கள் தவிர உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வசம் 8.74 சதவீத பங்குகள் உள்ளன.ஒட்டுமொத்தமாக நிறுவன முதலீட்டாளர்கள் வசம் 88.39 சதவீத பங்குகள் உள்ளன.
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வரும் 29-ம் தேதி வெளியாக உள்ளன.
ஏப்ரலில் ரூ.16,316 கோடி அந்நிய முதலீடு
ஏப்ரல் மாதத்தில் (24 தேதி வரை) 16,316 கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். மாறாக இதே காலகட்டத்தில் கடன் சந்தையில் இருந்து 1,643 கோடி ரூபாயை வெளியே எடுத்திருக்கிறார்கள்.
குறைந்த பட்ச மாற்று வரி (எம்.ஏ.டி.) பிரச்சினை காரணமாக இதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதத்தில் அந்நிய முதலீடு குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் பருவ மழை சிறிதளவு குறையும் என்ற அறிவிப்பும் அந்நிய முதலீட்டாளர்களின் உற்சாகத்தை குறைத்திருக்கிறது.
நடப்பாண்டில் இதுவரை 93,648 கோடி ரூபாய் நிகர அந்நிய முதலீடு (பங்குச்சந்தை + கடன் சந்தை) இந்தியாவுக்கு வந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT