Published : 18 Mar 2015 10:23 AM
Last Updated : 18 Mar 2015 10:23 AM
அமெரிக்காவைச் சேர்ந்த மிரா கேபிடல் நிறுவனம் சிக்கலில் இருக்கும் சஹாரா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறது. தவிர நஷ்ட ஈடாக ரூ.2,500 கோடி (40 கோடி டாலர்) வழங்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறது மிரா கேபிடல் நிறுவனம்.
205 கோடி டாலர் கடன் தருவதாக கூறிய மிரா கேபிடல் நிறுவனம் எங்களை ஏமாற்றிவிட்டது என்று சஹாரா நிறுவனம் கடந்த மாதம் கூறியது. மேலும் அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கினையும் சஹாரா பதிவு செய்தது. இந்த நிலையில் சஹாரா மீது மிரா கேபிடல் நிறுவனம் மானநஷ்ட வழக்கு தொடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போதுமான நிதி நிலைமை இல்லாத போது எங்களுக்கு பணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு பிறகு அந்த ஒப்பந்தத்தை மீறியது. இதனால் நிறுவனத்தின் நேரம், மற்றும் பெயர் கெட்டுவிட்டது என்று சஹாரா நிறுவனம் தெரிவித்தது.
இந்த நிலையில், சஹாரா மீது மிரா கேபிடல் நிறுவனம் குற்றம் சாட்டி இருக்கிறது. சஹாரா மீது சிறுசிறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஆதாரங்கள் படி சஹாரா ஒரு மோசடி நிறுவனம் என்று குற்றம்சாட்டி இருக்கிறது.
லக்னோவை சேர்ந்த சஹாரா குழுமத்தின் அதிகாரிகள் மிரா கேபிடல் நிறுவனம் மீதும் அதன் தலைவர் சர்னேஷ் சர்மா மீதும் பொதுத்தளத்தில் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்கள். அதனால் இந்த வழக்கை தொடுப்பதாக மிரா கேபிடல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் சஹாரா நிறுவனத்தின் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மீறி பேசி வருகிறார்கள். அவர்கள் சொத்துகளை விற்பதாக ஒப்புக்கொண்ட பிறகு தங்களின் முடிவை மாற்றிக்கொண்டார்கள். ஆனால் எங்கள் மீது (மிரா கேபிடல்) தொடர்ந்து குற்றம் சாட்டி நிறுவனத்தின் மதிப்பினை சரித்து வருகிறார்கள் என்று மிரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும் அமெரிக்க காவல் துறை அதிகாரிகள் இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை, எங்களது இயக்குநர்கள் மீது இதுவரை எந்தவிதமான விசாரணையும் நடக்கவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.
சஹாராவின் இந்த செயலால் முதலீட்டாளர்கள் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை உள்ளிட்ட பலவகைகளில் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என்று மிரா கேபிடல் தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT