Published : 10 Feb 2015 12:00 PM
Last Updated : 10 Feb 2015 12:00 PM

சென்செக்ஸ் 490 புள்ளிகள் சரிவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான சரிவைக் சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 490 புள்ளிகள் இறக்கத்தைக் கண்டது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 134 புள்ளிகள் சரிவைக் கண்டது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகான கருத்து கணிப்புகள் வெளியானதன் காரணமாக சந்தை சரிவை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருந்தது. இதனால் பாஜகவின் செல்வாக்கு குறித்து முதலீட்டா ளர்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சமே சந்தை சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

கருத்துக் கணிப்புக்கு பிறகான முதல் வர்த்தக நாள் என்பதால் நேற்று சரிவிலேயே தொடங்கிய சந்தை சரிவிலேயே முடிந்தது. தொடர்ந்து ஏழு வர்த்தக நாட்களாக சந்தை சரிவில் முடிவடைந் துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தையின் அனைத்துத் துறை பங்குகளும் சரிவைவே கண்டன. சந்தை சரிந்த நிலையிலும் பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லேப், சன் பார்மா, ஓஎன்ஜிசி, விப்ரோ, இன்போசிஸ் பங்குகள் ஓரளவு ஏற்றம் கண்டன. இதர சென்செக்ஸ் பங்குகள் சரிவைக் கண்டன.

எல் அண்ட் டி நிறுவனம் தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. நிறுவனத்தின் நிகர லாபம் 14.6 சதவீதம் சரிவைக் கண்டதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் நேற்று சந்தையில் கடும் சரிவை கண்டது.

இந்த பங்கு 6.6 சதவீதம் சரிந்தது. டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், கெய்ல் பங்குகள் 4 சதவீதத்துக்கும் மேல் சரிவில் முடிந்துள்ளன.

30 சென்செக்ஸ் பங்குகள் 490 புள்ளிகள் சரிவை கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 928 பங்குகள் ஏற்றமும், 1922 பங்குகள் சரிவையும் கண்டன. 221 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் முடிந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரமும் ஏற்ற இறக்க நிலையிலேயே இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 47 காசுகள் ஏற்றம் கண்டு 62.17 ரூபாயாக உள்ளது.

இதற்கிடையே நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான ஜிடிபி புள்ளி விவரங்களும் நேற்று வெளியிடப்பட்டது.

சந்தை தொடர்ந்து ஏழாவது வர்த்தக தினங்களாக சரிவில் முடிவடைந்து வருவது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் டெல்லி தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களுக்கு சந்தையில் எதிரொலிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x