Published : 26 Nov 2014 10:14 AM
Last Updated : 26 Nov 2014 10:14 AM
நாட்டில் 15 புதிய கிரீன்பீல்ட் விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்துவது, தேவையான துறைகளிடம் கட்டாயம் பெற வேண்டிய ஒப்புதல், போதிய நிதி திரட்டுவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விமான நிலைய உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மோபா, நவி மும்பை, ஷிர்டி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் புதிய கிரீன்பீல்ட் விமான நிலையங்கள் அமைய உள்ளதாக அவர் கூறினார்.
நாட்டில் இப்போது 132 விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் 46 உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் 15 சர்வதேச விமான நிலையங்களை இந்திய விமான ஆணையம் (ஏஏஐ) நிர்வகிக்கிறது. டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகியன கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்படுகின்றன.
31 விமான நிலையங்கள் செயல் படுத்தப்படாமல் உள்ளன. மற்றவை ராணுவ மற்றும் சுங்கத்துறையால் செயல்படுத்தப்படும் விமான நிலையங்களாகும். இவற்றில் மாநில மற்றும் யூனியன் அரசுகள் நிர்வகிக்கும் 6 விமான நிலையங்களும் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT