Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

‘வாராக்கடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமிது: ரகுராம் ராஜன்

வங்கிகளில் அதிகரித்துவரும் வாராக்கடன் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமிது என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

வங்கிகளின் வாராக்கடன் அளவு கைமீறிப் போகவில்லை என்றபோதிலும், இந்த சமயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக விரிவான ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் சொத்து நிர்வாகம் குறித்தும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வங்கிகளின் வாராக் கடன் அளவு எச்சரிக்கை மணி ஒலிக்கும் அளவுக்குச் செல்ல வில்லை என்றாலும் இந்த தருணத்தில் ரிசர்வ் வங்கி ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வங்கிளின் வாராக்கடன் நிர்வாகம் குறித்த ஆர்பிஐ-யின் விவாத அறிக்கை (வழிகாட்டுமுறை) கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதுகுறித்து காலாண்டு நிதிக் கொள்கை வெளியிடும்போது ராஜன் கூறியது:

வாராக் கடனை மறு கடனாக மாற்றியமைப்பது உள்ளிட்ட விஷயங்கள் பொதுவான விவாதத்துக்குப் பிறகு இறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். நீண்ட கால அடிப்படையில் இத்தகைய வாராக் கடன் சொத்துகள் வருவாய் தரக்குடியதாக மாறக்கூடும். அதற்கு அவற்றை கடனாக மாற்றியமைத்து அந்த கடன் சொத்துகளை கடன் பட்டியலில் கொண்டு வர வேண்டும். மேலும் தொழில் முனைவோரிடம் நியாயமாக நடந்து கொள்வதன் மூலமும் கடன் தொகைகள் வசூலாகும் என்று அவர் கூறினார்.

வங்கிகளின் வாராக் கடன் அளவு செப்டம்பர் மாத நிலவரப்படி ரூ. 2.37 லட்சம் கோடியாகும். இது நடப்பு நிதி ஆண்டு இறுதியில் 4.4 சதவீதமாக உயர்ந்து அதாவது ரூ. 2.90 லட்சம் கோடியாகும் என தரச்சான்று நிறுவனம் இக்ரா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் கணக்கு விவரம் உள்ளதா என்று கேட்டதற்கு, எச்சரிக்கை எழுப்பும் அளவுக்கு இல்லை என்று கூறிய அவர் விவரமான தகவலை அளிக்க மறுத்துவிட்டார்.

யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் வாராக் கடன் அளவு 7 சதவீதமாக இருந்தது. பாரத ஸ்டேட் வங்கியில் இது 5 சதவீதமாக இருந்தது.

மொத்தமுள்ள 26 பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு 4.8 சதவீதம் முதல் 5 சதவீத அளவுக்கு, அதாவது இந்த ஆண்டு இறுதியில் 2.60 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 196 லட்சம் கோடி தொகையானது நடப்புக் கணக்கில் உள்ளது. எஞ்சிய தொகை வாராக் கடனாக வைக்கப்பட்டுள்ளது.

வாராக் கடனை வசூலிக்க உறுதியான நடவடிக்கைகளை வங்கிகள் எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிகள் குறிப்பிடுகின்றன.

கடன் பெற்றவர்களுடன் பேச்சு நடத்தி அவர்கள் பெற்ற கடனை மறு கடனாக மாற்றியமைத்து அதை வசூலிக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே தராமல் இழுத்தடிக்கும் நிறுவனங்கள், தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

வாராக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மீது ஜனவரி 1-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x