Published : 01 Sep 2016 11:40 AM
Last Updated : 01 Sep 2016 11:40 AM
முடங்கியுள்ள கட்டுமானப் பணிகள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டப் பணிகளை முடுக்கி விடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரச்சினைகள் காரணமாக தேங்கியுள்ள திட்டப் பணிகளுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்கச் செய்வது, இத்துறைக்கு அதிக நிதி கிடைக்கச் செய்வது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில், ஒப்பந்ததாரர்கள் விரைவான தீர்வு கிடைக்கும் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும், இதுபோன்ற சர்ச்சையில் உள்ள திட்டங்களுக்கு வங்கி உத்தரவாதத் தொகையில் 75 சதவீதத்தை அளிப்பது என்றும் நிபுணர்கள் அடங்கிய புதிய சுயேச்சையான குழுவை உருவாக்குவது என்றும், இக்குழு புதிய ஒப்பந்தங்களை ஆராய அனுமதிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கட்டுமானத் துறையின் பங்களிப்பு 8 சதவீதமாகும். இத்துறை 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பையும் அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.
கட்டுமானத் துறை பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. கட்டுமானத் துறையின் செயல்பாடுகள் மேம்பட அரசும் பல்வேறு கட்டங்களில் பல சலுகைகளை அளித்து வருவதாக ஜேட்லி சுட்டிக் காட்டினார்.
கட்டுமானத்துறை சார்ந்த சச்சரவுகளைத் தீர்க்க விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. சமரச தீர்வு என்பது எளிதாக்கப்பட்டுள்ளது. வணிக நீதிமன்றங்கள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மிக அதிகப்படியான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கட்டுமானத் துறையின் பிரச்சினைகளுக்காக நிதிச் சேவைகள் துறை மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து ஒரு கொள்கையை வகுக்க உள்ளன என்று ஜேட்லி குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT