Last Updated : 17 Jun, 2016 09:45 AM

 

Published : 17 Jun 2016 09:45 AM
Last Updated : 17 Jun 2016 09:45 AM

சஹாரா சொத்து ஏலம்: மேலும் 16 சொத்துகளை சேர்த்தது ‘செபி’

சஹாரா சொத்துகளை ஏலம் விட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், இதில் மேலும் 16 புதிய சொத்துகளை சேர்த்து ஏலம் விட பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) முடிவு செய்துள்ளது. இதன் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு ரூ.1,200 கோடியாகும்.

சஹாரா நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்ப வசூலிக்க அந்த நிறுவனத்தின் சொத்துகளை ஏலம் விட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி முடிவு செய்தது. அதன்படி அடுத்த மாதம் இந்த சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளன. இந்த சொத்துகளுடன் மேலும் 16 புதிய சொத்துகள் சேர்க்கப்படுகின்றன. இதனோடு சேர்த்து மொத்தம் 42 சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளன. இதற்கான நிர்ணயிக்கபட்ட மதிப்பு மொத்தமாக ரூ.4,345 கோடி என்றும், பல சொத்துகள் கிட்டத்தட்ட ஒரே மதிப்பு கொண்டவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக செபி தனியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: எஸ்பிஐ கேபிடல் நிறுவனம் ஜூலை 20 ஆம் தேதி 8 சொத்துக்களை ஏலம் விடுகிறது. இதன் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு ரூ.666 கோடியாகும். ஹெச்டிஎப்சி ரியாலிட்டி ஜூலை 18 ஆம் தேதி தனியாக 8 சொத்துக்களை ஏலம் விட உள்ளது. இதற்கான நிர்ணயிக்கபட்ட மதிப்பு ரூ.579 கோடியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி சஹாரா நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பணத்தை திரும்ப வசூலிக்க செபி முடிவு செய்துள்ளது. செபியின் கண்காணிப்பின் கீழ் எஸ்பிஐ கேபிடல் மார்கெட் மற்றும் ஹெச்டிஎப்சி ரியாலிட்டி நிறுவனங்களின் இந்த ஏல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x