Published : 13 Nov 2013 08:33 AM
Last Updated : 13 Nov 2013 08:33 AM

2 ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சி: அலுவாலியா நம்பிக்கை

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீதத்தை எட்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

இத்தகைய வளர்ச்சியை எட்டுவதற்கான வளம் இந்தியாவில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 34-வது ஸ்கோச் மாநாட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இப்போது நிலவும் தேக்க நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் இரண்டு ஆண்டுகளில் முந்தைய நிலையை எட்டுவதற்கான வளம் நமது நாட்டில் உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கடந்த பத்து ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவான 5 சதவீதத்தைத் தொட்டுள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் முதல் ஆண்டில் 5 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கு 8 சதவீதமாகும். நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையான பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாகும்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் இது 4.8 சதவீதமாக இருந்தது. முந்தைய நிதி ஆண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வளர்ச்சி 5.4 சதவீதமாக இருந்தது. நீண்ட கால மற்றும் குறுகிய காலப் பொருளாதார வளர்ச்சியானது 8 சதவீதமாகும். இதை எட்டுவதற்கு 12-வது திட்டக் காலத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்துப் பணிகளையும் செய்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாகத் திட்டக் காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட முடியவில்லை.

திட்டக்குழுவின் கணிப்புப்படி 12-வது திட்ட காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் அடுத்த ஆண்டு மத்திய வாக்கில்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்பைத் திட்டக்குழு வெளியிடும் என்று மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் மேம்படும் என நம்புவதாக அலுவாலியா கூறினார். முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாவது பாதியில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்போது ஒட்டுமொத்தமாக வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டும் என மான்டேக் சிங் நம்பிக்கை வெளியிட்டார்.

பிற்பாதியில் வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று கூற முடிகிறதே தவிர, அது எத்தனை சதவீத வளர்ச்சியாக இருக்கும் எனக் குறிப்பிட முடியாது. பொருளாதாரத் தேக்க நிலை முடிந்துவிட்டது எனக் கூற முடியுமா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, கீழ்நிலை பொருளாதாரத் தேக்க நிலை காலம் முடிந்துவிட்டது. இப்போது மீட்சிப் பாதைக்குத் திரும்பிவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக மீட்சி முழுவீச்சில் இருக்கும் என்று கூற முடியாது. இருப்பினும் மீட்சி தொடங்கிவிட்டதற்கான சான்றுகள் தெரிகின்றன என்றார் மான்டேக்.

இந்தியாவின் ஏற்றுமதி 13.47 சதவீதம் அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான உயர்வாகும். ஏற்றுமதி அதிகரித்துள்ளது நல்ல சமிக்ஞை என்று மான்டேக் குறிப்பிட்டார்.

நடப்பு நிதி ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மத்திய நிதி அமைச்சர் நிர்ணயித்ததைவிட குறையும் என்று அவர் மேலும் கூறினார்.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 7,000 கோடி டாலரிலிருந்து 6,000 கோடி டாலராகக் குறையும் என்று நிதியமைச்சரே கூறியுள்ளார். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் கடந்த ஆண்டு இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை அளவான 8,800 கோடி டாலரை விட இப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மிகக் குறைவு என்று மான்டேக் கூறினார். நிதியமைச்சகத்தின் நடவடிக்கைகள் நுண் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டி காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x