Published : 20 Dec 2016 03:51 PM
Last Updated : 20 Dec 2016 03:51 PM
பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளினால் வங்கிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை மையப்படுத்தி அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஆகியவை டிசம்பர் 28-ம் தேதி போராட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.
டிசம்பர் 28-ம் தேதி ஆர்பாட்டத்துடன், டிசம்பர் 29ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதுகின்றனர். மேலும் ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது குறித்து சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் அழைப்புக்கு இணங்க முக்கிய நகரங்களில் எங்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆர்பிஐ அதிகாரியிடம் அளித்துள்ளனர்.
போதுமான பணத்தை வங்கிகளுக்கு ஆர்பிஐ அனுப்ப இயலவில்லையெனில், போதிய பணம் வங்கிகளுக்கு அனுப்பப்படும் வரை வங்கி பண நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு எடுக்க வேண்டும். விரைவில் வங்கிகளுக்கு போதிய தொகை அனுப்பப்படுவதோடு, ஏடிஎம் நடவடிக்கைகளும் மீட்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
மேலும் வங்கிக் கிளைகள் பணமின்றி தவித்து வரும்போது சிலபல தனியார்களிடம் பெரிய அளவில் புதிய நோட்டுகள் எப்படி கைவசமாகின என்பது குறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், வங்கி ஊழியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கூடுதல் நேரம் பணியாற்றி வரும் இந்த ஒருமாதகாலத்திற்கு ஊழியர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT