Published : 24 Jun 2018 10:08 AM
Last Updated : 24 Jun 2018 10:08 AM

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை விமான நிலையங்களில் விற்க திட்டம்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆலோசனை

புவிசார் குறியீடு சார்ந்த பொருட்களை விமான நிலையங்களில் விற்பதற்கான திட்டம் அரசிடம் உள்ளது. இதற்கான கொள்கைகளை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், புவிசார்ந்த பொருட்களை இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் விற்பனை மையம் அமைத்து விற்பதற்கான கொள்கைகளை உருவாக்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளேன். இதன் மூலம் அந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும் என்று கூறினார்.

புவிசார் அடையாளம் கொண்ட பொருட்கள் என்பது விவசாயம், இயற்கை மற்றும் கைவினை, தொழில்துறை சார்ந்து அந்தந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். அந்த பகுதிகளின் பாரம்பரிய பொருட்களாகவும் இருக்கும். அந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதன் தரம் மற்றும் தனித் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளேன். இந்தியாவின் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்க கொள்கைகளை உருவாக்கக் கேட்டுள்ளேன். சுரேஷ் பிரபு விமானத் துறை அமைச்சகத்தை கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புவிசார் குறியீடு கொண்ட பொருட்களின் பெயர்களை மற்றவர்கள் பயன்படுத்துவதிலிருந்து சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு பொருட்களை உருவாக்கும் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பாசுமதி அரிசி,டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தஞ்சாவூர் ஓவியங்கள் என அந்தந்த பகுதி சார்ந்து பல பொருட்கள் அடையாளமாக உள்ளன. இதன் மூலம் புவிசார் அடையாள சுற்றுலா துறை மேம்படும் என்றும் கூறினார்.

அமைச்சருடனான இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் விமான துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x