Published : 27 Apr 2018 09:11 AM
Last Updated : 27 Apr 2018 09:11 AM

யெஸ் வங்கி நிகர லாபம் 29% உயர்வு

முக்கிய தனியார் வங்கியான யெஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் உயர்ந்து ரூ.1,179 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.914 கோடியாக நிகர லாபம் இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் 27.8 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.5,606 கோடியாக இருந்த மொத்த வருமானம் தற்போது ரூ.7,163 கோடியாக இருக்கிறது.

வங்கியின் முக்கிய அளவுகோல்களில் ஒன்றான நிகர வட்டி வரம்பு 3.4 சதவீதமாக இருக்கிறது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 26.7 சதவீதம் உயர்ந்து ரூ.4,233 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,339 கோடியாக இருந்தது. மொத்த வருமானமும் ரூ.20,642 கோடியில் இருந்து ரூ.25,561 கோடியாக உயர்ந்திருக்கிறது. நேற்று கூடிய இயக்குநர் குழு ஒரு பங்குக்கு ரூ.2.7 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்திருக்கிறது. மொத்த வாராக்கடன் 1.52 சதவீதத்தில் இருந்து 1.28 சதவீதமாக குறைந்திருக்கிறது. நிகர வாராக்கடன் 0.81 சதவீதத்தில் இருந்து 0.64 சதவீதமாக குறைந்திருக்கிறது.

மேலும் ரூ.30,000 கோடி அளவுக்கு நிதி திரட்ட வங்கியின் இயக்குநர் குழு ஓப்புதல் வழங்கி இருக்கிறது. இந்த தொகையை ரூபாய் அல்லது வெளிநாட்டு கரன்ஸியில் திரட்டலாம். அதேபோல உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சந்தையிலோ, ஒரு முறையோ பல கட்டங்களாகவோ திரட்டுவதற்கு இயக்குநர் குழு அனுமதி வழங்கி இருக்கிறது.

மொத்த கடனில் ஜெம் மற்றும் ஜூவல்லரி பிரிவில் 1.4 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. இரும்பு மற்றும் ஸ்டீல் பிரிவில் 2சதவீதமும், டெலிகாம் பிரிவில் 2.2 சதவீதமும் கடன் வழங்கப்பட்டிருப்பதாக வங்கி தெரிவித்திருக்கிறது.

காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருப்பதால் நேற்றைய வர்த்தகத்தில் இந்த பங்குகளில் ஏற்றம் நன்றாக இருந்தது. 8.35 சதவீதம் வரை இந்த பங்கு உயர்ந்து முடிந்தது. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் இந்த பங்கின் சந்தை மதிப்பு ரூ.6,184 கோடி உயர்ந்தது. மொத்த சந்தை மதிப்பு ரூ81,132 கோடியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x