Published : 25 Apr 2024 05:16 AM
Last Updated : 25 Apr 2024 05:16 AM

சூரிய மின் உற்பத்தி 4.05 கோடி யூனிட்டாக உயர்வு

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் சூரியசக்தி மின் உற்பத்தி அதிகபட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் 6,912 மெகாவாட்டாக உள்ளது. இதுதவிர, கட்டிடங்கள் மேல் அமைக்கப்பட்ட மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் 449 மெகாவாட், விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின்நிலையங்களின் நிறுவுதிறன் 65 மெகாவாட் என மொத்தம் 7,426 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.

இவற்றில் தினமும் சராசரியாக 2 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதி சூரியசக்தி மின் உற்பத்தி அதுவரை இல்லாத அளவுக்கு 3.99 கோடி யூனிட்டாக அதிகரித்தது. இந்நிலையில், இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், கடந்த 23-ம் தேதி சூரியசக்தி மின் உற்பத்தி 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

காற்றாலைகளில் 1 கோடி யூனிட்: இதேபோன்று, காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்கும் நிலையில், தற்போது தினமும் காற்றாலைகளில் இருந்து ஒரு கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கிறது.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன் ஆகும். அப்போது, காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 10 கோடி யூனிட்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்கும்.

இந்த ஆண்டுக்கான காற்றாலை சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த நிலையில், காற்றாலைகளில் கிடைக்கும் அதிக மின்சாரம், தமிழக மின்தேவையை பூர்த்திசெய்ய முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, ஒரு யூனிட் காற்றாலை மின்சாரம் கொள்முதல் விலை சராசரியாக ரூ.3.10 ஆக உள்ளது. இது வழக்கமான மின்சார கொள்முதல் விலையைவிட குறைவு. தவிர, இது சுற்றுச்சூழலையும் பாதிப்பது இல்லை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x