Published : 19 Mar 2024 06:16 AM
Last Updated : 19 Mar 2024 06:16 AM

பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகள்: பரிசாக வழங்கினார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி

நாராயணமூர்த்தி

பெங்களூரு: இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி தனது பேரனுக்கு (4 மாத குழந்தை) ரூ.240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி உள்ளார்.

நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவர் நாராயணமூர்த்தி. இவரது மனைவி சுதா மூர்த்தி. இந்த தம்பதிக்கு ரோஹன் மற்றும் அக்சதா என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் அக்சதா மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தம்பதிக்கு ஏற்கெனவே 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், ரோஹன் - அபர்ணா கிருஷ்ணன் தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஏகாக்ரா ரோஹன் என பெயரிட்டுள்ளனர். தனது 4 மாத பேரக் குழந்தையான ஏகாக்ரா ரோஹனுக்கு நாராயணமூர்த்தி 15 லட்சம் பங்குகளை கடந்த 15-ம் தேதி பரிசாக வழங்கி உள்ளார். இதன் இப்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.240 கோடி ஆகும். இதன் மூலம் நாட்டின் குழந்தை கோடீஸ்வரர்களில் ஒருவராக ஏகாக்ரா உருவெடுத்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவன பங்குகளில் 0.4% நாராயணமூர்த்தி வசம் இருந்தது. இதில் 0.04% பங்குகளை தனது பேரனுக்கு வழங்கியதன் மூலம் அவரது பங்கு 0.36% ஆகக் குறைந்துள்ளது.

நாராயணமூர்த்தி மனைவி சுதா மூர்த்தி சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் 0.83% பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.5,600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x