Published : 19 Mar 2024 06:11 AM
Last Updated : 19 Mar 2024 06:11 AM

ராணுவப் படையில் 6ஜி, ஏஐ தொழில்நுட்ப பிரிவு தொடக்கம்

புதுடெல்லி: பிற துறைகளைப் போன்று போர்க்களத்திலும் தொழில்நுட்ப மாற்றம் பெரும் பங்காற்றி வருகிறது. குறிப்பாக தகவல் தொடர்புத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி யுத்த களத்தில் எதிரிகளிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும், எதிரிப்படையை துல்லியமாகத் தாக்கவும் பெரிதும் உதவுகிறது. இது குறித்து ராணுவப் தொழில்நுட்ப பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் கம்பி மற்றும்கம்பியில்லா தொழில்நுட்ப முறைகளை அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிக் கொண்டு செல்ல ‘ஸ்டீக்’ (STEAG) எனப்படும் சமிக்ஞை தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் தகவமைப்பு குழு எனும் புதிய தொழில்நுட்பப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

எலெக்ட்ரானிக் போர் புரியும் முறைகள், 5 ஜி மற்றும் 6 ஜி நெட்வொர்க்கிங், குவான்ட்டம் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேர்னிங், யுத்தம் சார்ந்த மென்பொருள் பயன்பாடுகள், அலைபேசி தொடர்பாற்றல் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப முறைகள் இதில் இணைக்கப்படவிருக்கிறது. ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் திட்டங்களுடன் ஸ்டீக் திட்டமும் இணைக்கப்படும். இதன் மூலம் தொழில் துறைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x