Published : 01 Feb 2018 05:51 PM
Last Updated : 01 Feb 2018 05:51 PM
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்தில் மருத்துவ வசதி அளிக்கும் திட்டத்தை பட்ஜெட்டில் நேற்று மத்திய அரசு அறிவித்தது.
உலகிலேயே அரசின் நிதி உதவியுடன் மக்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய தேசிய சுகாதாரத் பாதுகாப்பு திட்டம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டின் போது அறிவித்தார்.
2018-19ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று அறிவித்தார். நாட்டு மக்களுக்கான சுகாதாரத் திட்டம் குறித்து அவர் அறிவித்ததாவது-
உலகிலேயே மிகப்பெரிய தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு 2018-19 நிதி ஆண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தின் மூலம் 10 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ வசதி கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டம் எந்தவிதமான தடங்கல் இன்றி செயல்பட போதுமான நிதி உதவி அளிக்கப்படும்.
மேலும், நாடுமுழுவதும் 24 மருத்துவக்கல்லூரிகள் வரும் நிதி ஆண்டில் அமைக்கப்படும், மாவட்டத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்படும். 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்க அரசு இலக்கு வைத்துள்ளது.
இதற்கு முன் செயல்படுத்தப்பட்டுவந்த ராஷ்ட்ரிய ஸ்வஸ்தியா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை மட்டுமே மருத்துவ உதவி கிடைத்து வந்தது. ஏராளமான ஏழைக்குடும்பங்கள் மருத்துவசிகிச்சைக்காக தங்களின் சொத்துக்களை விற்று செலவு செய்கின்றனர். ஏழைமக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த தேசிய சுகாதார கொள்கைக்காக ரூ. 1,200 கோடி ஒதுக்கப்படும். நாட்டில் 1.50 லட்சம் சுகாதார மையங்கள் உருவாக்கப்பட்டு, மக்கள் எளிதாக மருத்துவசிகிச்சை பெற வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT